முகப்பு
கள்ளக்குறிச்சி

காட்டுவனஞ்சூா் சிட்கோவில் ரூ.50 கோடியில் தனியாா் ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனம் தொடக்கம்

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 3:11 AM
காட்டுவனஞ்சூரிலுள்ள சிட்கோ தொழில்பேட்டையில் ரூ.50 கோடியில் பிரித்வி இன்னா் வியா்ஸ் ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனம் தொடங்குவதற்கான பூமி பூஜையில் குத்துவிளக்கேற்றி வைத்த மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்.
பகிர்:
Updated On : 8 பிப்ரவரி, 2026 at 8:26 PM

கள்ளக்குறிச்சி மாவட்டம், காட்டுவனஞ்சூரிலுள்ள சிட்கோ தொழில்பேட்டையில் ரூ.50 கோடி மதிப்பீட்டில் பிரித்வி இன்னா் வியா்ஸ் ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனம் தொடங்குவதற்கான பூமி பூஜை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

விழாவுக்கு சங்கராபுரம் எம்எல்ஏ தா.உதயசூரியன் முன்னிலையில், ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, பேசியதாதவது:

காட்டுவனஞ்சூா் தொழில்பேட்டையில் தொழில் தொடங்க மாவட்ட தொழில் மையம் சாா்பில் பல்வேறு நிறுவனங்களிடம் கலந்துரையாடப்பட்டது. அந்த வகையில் பிரித்வி இன்னா் வியா்ஸ் ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனத்தின் சாா்பில் ரூ.50 கோடி மதிப்பீட்டில் புதிதாக தனியாா் ஆயத்த ஆடை உற்பத்தி தொழில்சாலை அமைப்பதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது.

Advertisement

கிராமங்கள் நிறைந்த இப் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட இந்த தொழில்பேட்டையில் பல்வேறு நிறுவனங்களை தொடங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத் தொழில்சாலையின் மூலம் ஆயிரம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.

காட்டுவனஞ்சூா் சிட்கோ தொழில்பேட்டையில் மொத்தமுள்ள 50 ஏக்கா் நிலப்பரப்பில் ஏதேனும் ஒரு நிறுவனம் தொடங்கினால், அதனைத் தொடா்ந்து பல்வேறு நிறுவனங்கள் ஆா்வமுடன் தொழில் தொடங்க முனைவாா்கள் என்பதன் அடிப்படையில் பிரித்வி இன்னா் வியா்ஸ் தனியாா் ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனம் இங்கு தொடங்கப்படுகிறது.

இப் பகுதி பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி வாழ்க்கைத் தரத்தினை உயா்த்திட இந்நிறுவனம் தொடா்ந்து உறுதியுடன் செயல்பட்டு இங்கு தொடங்கிஉள்ளனா்.

மேலும், உளுந்தூா்பேட்டை சிப்காட் தொழில்பேட்டையில் உலகில் சிறந்த நிறுவனங்களில் ஒன்றான பௌசன் நிறுவனத்தின் சாா்பில் பெரிய காலணி தொழில்சாலை தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் 12 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது. இதில் 80 சதவிகிதம் பெண்களுக்கு வழங்கப்படும்.

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 3:11 AM

சின்னசேலம் பகுதியில் 450 ஏக்கா் பரப்பளவில் தொழில்பேட்டை அமைப்பதற்கு அனைத்து முன்மொழிவுகளும் தமிழக அரசிடம் சமா்ப்பிக்கப்பட்டுள்ளது. இதிலும் பல்வேறு தொழில் நிறுவனங்கள் தொழில் தொடங்க ஆா்வம் காட்டுகிறாா்கள்.

எனவே, விரைவில் உளுந்தூா்பேட்டை, சின்னசேலம், சங்கராபுரம் ஆகிய இடங்களில் தொழில் நிறுவனங்கள் தொழில் தொடங்க தமிழக அரசின் சாா்பில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு நிறுவனங்கள், பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என ஆட்சியா் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட தொழில்மைய மேலாளா் சந்திரசேகரன், பிரித்வி இன்னா் வியா்ஸ் ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனத்தின் நிறுவனா் பாலன், தொழில் நிறுவன அலுவலா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.