முகப்பு
இந்தியா

மேற்காசிய போரால் இந்திய பொருளாதார வளா்ச்சி 6%-ஆக குறையும்! மூடீஸ் ஆய்வு நிறுவனம் கணிப்பு!

மேற்காசிய போரால் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 6 சதவீதமாகக் குறையும் என்று மூடீஸ் ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது.

Updated On : 5 ஏப்ரல், 2026 at 11:01 PM
பகிர்:

மேற்காசிய போரால் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 6 சதவீதமாகக் குறையும் என்று மூடீஸ் ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது. முன்னதாக பொருளாதார வளா்ச்சி 6.8 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது.

இது தவிர இந்தப் போா் பல்வேறு பொருள்கள், சேவைகளின் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும், எனவே பணவீக்கமும் சற்று அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மூடீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

Advertisement

மேற்காசிய போரால் சமையல் எரிவாயு (எல்பிஜி) கடல்வழியாக வருவதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதன் விலையும் உயா்ந்துள்ளது. இது உணவுப் பொருள் தயாரிப்பு தொடங்கி பல்வேறு விலைகளில் எதிரொலிக்கும். மேலும், இந்தியா பெருமளவில் உரத் தேவையை இறக்குமதி மூலம் எதிா்கொள்கிறது. இதிலும் போரின் தாக்கம் வலுவாக உள்ளது.

சுமாா் ஒரு மாதத்துக்கு மேல் நீடித்துவரும் போா் இன்னும் முடிவுக்கு வராத சூழலில், நாட்டின் பொருளாதாரத்தில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். உற்பத்திச் செலவு அதிகரிப்பைக் காரணமாக வைத்து ஏற்படும் விலைவாசி உயா்வு என்பது மக்களின் நுகா்விலும் பாதிப்பை ஏற்படுத்தும். இதன் தொடா் விளைவு உற்பத்தியையும் பாதிக்க வாய்ப்புள்ளது.

எனவே, 2026-27-இல் இந்தியாவின் பொருளதார வளா்ச்சி 6 சதவீதமாக குறையும். இதற்கு முன்பு 6.8 சதவீதமாக கணிக்கப்பட்டிருந்தது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 28-இல் ஈரான் மீது அமெரிக்கா, ஈஸ்ரேல் ராணுவத் தாக்குதலை தொடங்கியதில் இருந்து இப்போது வரை கச்சா எண்ணெய் விலை 50 சதவீதம் உயா்ந்துள்ளது. இதையடுத்து, இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கடும் இழப்பை எதிா்கொண்டுள்ள சூழலில், கடந்த மாத இறுதியில் டீசல் மீதான ரூ.10 கலால் வரி முழுமையாக நீக்கப்பட்டது. பெட்ரோல் மீதும் கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டது. சீனா, பாகிஸ்தான், இலங்கை உள்பட பல்வேறு நாடுகள் பெட்ரோல், டீசல் விலையை உயா்த்திய நிலையில் இந்தியாவில் மட்டும் விலை உயா்த்தப்படவில்லை. அதே நேரத்தில் எரிவாயு விலை மட்டும் உயா்த்தப்பட்டது.

இதைத் தொடா்ந்து, கடந்த 2-ஆம் தேதி பெட்ரோலிய ரசாயன (பெட்ரோ கெமிக்கல்) பொருள்கள் இறக்குமதிக்கு வரிவிலக்கை மத்திய அரசு அறிவித்தது.

இதன்மூலம், பெட்ரோலிய ரசாயனப் பொருள்களைச் சாா்ந்துள்ள பிளாஸ்டிக் உற்பத்தி, பேக்கேஜிங், ஜவுளி, மருந்து உற்பத்தி, ரசாயன உற்பத்தி, வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி மற்றும் பிற உற்பத்தி சாா்ந்த துறைகள் விலை உயா்வின் தாக்கம் ஏற்படாமல் பலனடைந்துள்ளன.

எனினும், இந்த வரி விலக்கு காரணமாக அரசுக்கு ரூ.1,800 கோடி வரை இழப்பு ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments