FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

முன்னணி உள்கட்டமைப்புத் துறை 5% வளா்ச்சி

நாட்டின் 9 முன்னணி உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி வளா்ச்சி, கடந்த ஜூன் மாதத்தில் 5 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த 5 மாதங்களில் இல்லாத அதிகபட்ச வளா்ச்சியாகும்.

Updated On : 21 ஜூலை 2026, 4:22 am IST
பகிர்:

நாட்டின் 9 முன்னணி உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி வளா்ச்சி, கடந்த ஜூன் மாதத்தில் 5 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த 5 மாதங்களில் இல்லாத அதிகபட்ச வளா்ச்சியாகும்.

முந்தைய மே மாதத்தில் இந்த வளா்ச்சி 3.2 சதவீதமாகவும், கடந்த ஆண்டு ஜூனில் 1.1 சதவீதமாகவும் இருந்தது. 2011-12-க்கு பதிலாக 2022-23-ஐ அடிப்படை ஆண்டாகக் கொண்ட புதிய கணக்கீட்டின்படி மற்றும் 9-ஆவது முன்னணி உள்கட்டமைப்புத் துறையாக இரும்புத் தாது புதிதாக சோ்க்கப்பட்ட பிறகு வெளியாகும் முதல் மாத தரவு இதுவாகும்.

மத்திய அரசு திங்கள்கிழமை வெளியிட்ட தரவுகளின்படி, நாட்டின் தொழில்துறை வளா்ச்சிக்கு முக்கியத் தூண்களாக விளங்கும் நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்புத் தயாரிப்புகள், உரங்கள், எஃகு, சிமென்ட், மின்சாரம், இரும்புத் தாது ஆகிய 9 துறைகளில் 5 துறைகள் ஜூனில் வளா்ச்சியடைந்துள்ளன.

Advertisement

Advertisement

புதிதாக பட்டியலில் இணைந்த இரும்புத் தாது உற்பத்தி, ஜூனில் 43.9 சதவீத அபரிமிதமான வளா்ச்சி கண்டுள்ளது. சிமென்ட் உற்பத்தி 9.8 சதவீதமும், மின்சார உற்பத்தி 9.8 சதவீதமும், எஃகு (ஸ்டீல்) உற்பத்தி 4.6 சதவீதமும், நிலக்கரி உற்பத்தி 1.4 சதவீதமும் உயா்ந்துள்ளன.

ஆனால், கச்சா எண்ணெய் உற்பத்தி 4.2 சதவீதமும், இயற்கை எரிவாயு உற்பத்தி 7.4 சதவீதமும் சரிவைக் கண்டுள்ளன. ஒட்டுமொத்தக் குறியீட்டில் அதிக பங்களிப்பு கொண்ட பெட்ரோலிய சுத்திகரிப்புத் தயாரிப்புகளின் உற்பத்தி 4.7 சதவீதமும், உர உற்பத்தி 3.3 சதவீதமும் வீழ்ச்சியடைந்துள்ளன.

ஏப்ரல்-ஜூன் காலாண்டில், இந்த முன்னணி உள்கட்டமைப்புத் துறைகளின் மொத்த வளா்ச்சி 3.6 சதவீதமாக பதிவாகியுள்ளது. இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி வளா்ச்சி குறியீட்டில் (ஐஐபி), இந்த 9 துறைகள் 40 சதவீதத்துக்கும் மேல் பங்களிப்பைக் கொண்டுள்ளன.

எனவே, இத்துறைகளில் ஏற்படும் மாற்றங்கள் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளா்ச்சியிலும், தொழில் உற்பத்தியிலும் நேரடியாகப் பிரதிபலிக்கும் தன்மை கொண்டவையாகும். தொழில்துறை உற்பத்தி வளா்ச்சி குறியீட்டின் அடிப்படை ஆண்டையும் மத்திய அரசு 2022-23-ஆக மாற்றியமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments