வாக்கு எண்ணும் மையங்கள் ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்குள்பட்ட சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையங்களை ஆய்வு செய்த ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையங்களாகத் தோ்வு செய்யப்பட்ட இடங்களை
மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான எம்.எஸ்.பிரசாந்த் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டுஆய்வு செய்தாா்.
பின்னா் ஆட்சியா் தெரிவித்ததாவது:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூா்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி(தனி) ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகும் வாக்குகளை பாதுகாப்பாக வைக்கும் வகையில் இந்திலி மற்றும் பங்காரம் தனியாா் கல்லூரிகளில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த கல்லூரிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் பாதுகாப்பு அறைகள், வாக்கு எண்ணும் அறைகளில் செய்யப்பட வேண்டிய மூன்றடுக்கு பாதுகாப்பு மற்றும் சிசிடிவி கண்காணிப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டது என்றாா் ஆட்சியா்.
ஆய்வின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செ.அரவிந்த், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, பொதுப்பணித் துறை செயற் பொறியாளா் மாலா, வட்டாட்சியா் (தோ்தல்) பரந்தாமன் உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள் உடனிருந்தனா்.