முகப்பு
புதுச்சேரி

மூளை, நரம்பு மண்டல பாதிப்புக்கு உரிய சிகிச்சை அளிக்க வலியுறுத்தல்

மூளை மற்றும் நரம்பு மண்டல பாதிப்புக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என ஜிப்மர் மருத்துவமனை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ரூபேஷ்குமார் கூறினார்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:59 AM
பகிர்:

மூளை மற்றும் நரம்பு மண்டல பாதிப்புக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என ஜிப்மர் மருத்துவமனை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ரூபேஷ்குமார் கூறினார்.

புதுவை மாநில அளவில் பணிபுரியும் மருந்தாளுநர்களுக்கான தொடர் மருந்தியல் கல்வி நிகழ்ச்சி, அரசு பொது மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு திட்ட இயக்குநர் எச்.ரங்கநாத் தலைமை வகித்தார். அமைப்புச் செயலர் எம்.அன்புச்செல்வன் வரவேற்றார். கெஜலட்சுமி தொகுப்புரை ஆற்றினார். ஜான்மெல்ட் அறிமுகவுரை ஆற்றினார். நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ரூபேஷ்குமார் "மூளை பாதுகாப்பில் மருந்தியல் கண்ணோட்டம்' என்ற தலைப்பில் பேசியதாவது:

Advertisement

மத்திய நரம்பு மண்டலத்தில் உண்டாகும் தீவிர பாதிப்பானது பல்வேறு வகையான ஆபத்தான பின்விளைவுகளுக்கு காரணமாகிறது. நரம்பு மண்டலம் அல்லது மூளை பாதிப்பானது, அடிபடுவதாலோ ரத்தக் குழாயில் ஏற்படும் அடைப்பினாலோ அல்லது மூளையில் உண்டாகும் பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்றுதலாலோ ஏற்படும்.

ஆரம்ப நிலையில் மூளை அல்லது மத்திய நரம்பு மண்டல பாதிப்பு சில அறிகுறிகளை வெளிப்படுத்தும். சரியான சிகிச்சை எடுக்கத் தவறும் பட்சத்தில் பக்கவாதம், கை, கால் செயலிழப்பு போன்ற சரி செய்ய இயலாத நிரந்தர பாதிப்புகளை உண்டாக்கும்.

இந்த வகை அதிகபட்ச பின்விளைவுகளை உண்டாக்கும், மூளை அல்லது நரம்பு மண்டல பாதிப்பை கண்டறிந்து தக்க சிகிச்சை அளிப்பதில் மருந்தாளுநர்களுக்கு பங்குண்டு.

தடையில்லா ரத்த ஓட்டத்தை உறுதி செய்வது ஆக்சிஜன், குளுக்கோஸ் ஆகியவை மூளைக்கு போதுமான அளவுக்கு கிடைக்கச் செய்வதின் மூலம் மூளை செயல்பாட்டை மேம்படுத்துவது போன்றவை அவசியமாகும்.

பெருமளவு பாதிப்பில் இருந்து மூளையை காப்பாற்றும் மருந்தியல் கண்டுபிடிப்புகளான தியோபெண்டால், புரோபோபால், ஸ்டீராய்டு போன்றவை உயிர்காக்கும் மருந்துகளாகும்.

மருந்தியல் துறையின் ஆராய்ச்சியின் விளைவாக புதிய கண்டுபிடிப்பான சைட்டி கோலின் மருந்து முதல்நிலை பாதிப்பில் இருந்து மூளையை காக்கும் என்றார் ரூபேஷ்குமார்.

இந்நிகழ்ச்சியில் திட்ட நிர்வாகிகள் அரவிந்தன், ராஜேந்திரன், ராமசாமி, ஜெயபால், வெற்றிவேல், அஜய், அரசு மருந்தாளுநர்கள், ஜிப்மர், குளுனி, மதர் தெரசா, என்ஆர்எச்எம், தனியார் மருந்தாளுநர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments