புதுவை காவல் துறை சார்பில் திருநங்கைகளுக்கான ஆலோசனைக் கூட்டம் தமிழ்ச் சங்க வளாகத்தில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
கூட்டத்துக்கு முதுநிலை எஸ்.பி. ராஜீவ் ரஞ்சன் தலைமை வகித்தார். எஸ்.பி.க்கள், காவல் ஆய்வாளர்கள், திருநங்கைகள் சங்கப் பிரதிநிதிகள், திருநங்கைகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் திருநங்கைகளுக்கு ஏற்படும் பிரச்னைகள், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், பொருளாதார நிலை குறித்து காவல் துறை அதிகாரிகள் கேட்டறிந்தனர்.
பின்னர், முதுநிலை எஸ்.பி. ராஜீவ் ரஞ்சன் கூறியதாவது: திருநங்கைகள் வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தக் கூடாது. உங்களுடைய பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். வாழ்க்கை நிலையை மாற்ற அரசு அளிக்கும் சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நேர்மையாக வாழ வேண்டும். தங்களுக்கு வருவாய் ஆதாரம் இல்லை என அவர்கள் தெரிவித்தனர்.
வர்த்தக சங்கங்கள், வணிகர் சங்கங்களிடம் அவர்களுக்கு வேலைவாய்ப்பைத் தருமாறு கேட்டுள்ளோம். காவல் துறையில் அவர்களுக்கு பணி வழங்குவது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சுய உதவிக் குழுக்களைத் தொடங்கி பல்வேறு வியாபாரங்களை அவர்கள் மேற்கொள்ளலாம். காவல் துறை அவர்கள் வாழ்வு மேம்பட உதவி புரியும் என்றார் அவர்.
ஆலோசனைக் கூட்டத்தில் திருநங்கைகள் கூறியதாவது: தமிழகத்தைப் போல, புதுவையிலும் எங்களுக்கு வீட்டு வசதி செய்து தர வேண்டும். தொழில் தொடங்க நிதியுதவி அளிக்க வேண்டும். நாங்கள் பணிபுரியத் தயாராகத்தான் உள்ளோம்.
எனவே, அரசும் எங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து தரவேண்டும், நாங்களும் காவல் துறையினரின் அறிவுரைகளைப் பின்பற்றி நடப்போம் எனத் தெரிவித்தனர்.