புதுவையில் வெடிகுண்டு கலாசாரம்: அதிமுக கண்டனம்
புதுவையில் வெடிகுண்டு கலாசாரம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளதாக அதிமுக கொறடா வேதனை தெரிவித்துள்ளார்.
புதுவையில் வெடிகுண்டு கலாசாரம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளதாக அதிமுக கொறடா வேதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அதிமுக சட்டப்பேரவை கொறடா வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கை:
புதுச்சேரியை ஆளும் மக்கள் விரோத காங்கிரஸ், திமுக கூட்டணி அரசு அனைத்துத்துறையிலும் தோல்வியடைந்துள்ளது. குறிப்பாக, சட்டம்-ஒழுங்கு பற்றி அரசு துளியும் கவலைப்படுவதில்லை. சிறையில் ஆண், பெண் கொலை குற்றவாளிகள் சந்தித்துப் பேசி சதி செய்கின்றனர். அவர்களுக்கு சிறைத்துறை போலீஸார் துணை செல்கின்றனர். விவசாயிகளுக்காக போராடிய சட்டமன்ற உறுப்பினரையே போலீஸார் தாக்கி தடியடி நடத்துகின்றனர்.
தற்போது வெடிகுண்டு கலாôரமும் தலை தூக்கியுள்ளது. மேட்டுப்பாளையம் ராம்நகரில் 3 பேர் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் புதுச்சேரி மக்களிடையே பெரும் பீதியையும், வேதனையையும் அளித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக நலத்திட்டங்கள் நிறுத்தம், சுகாதாரமின்மை, தனியார்மய கொள்கை, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு என புதுச்சேரியை பொட்டல் காடாக காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசு மாற்றி வருகிறது என்று தெரிவித்துள்ளார் வையாபுரி மணிகண்டன்.