புதுச்சேரி ஜிப்மரில் அதிநவீனத் தொழில்நுட்பப் பயிலரங்கம் சனிக்கிழமை தொடங்கப்பட்டது.
ஜிப்மர் அவசர சிகிச்சைப் பிரிவு சார்பில் நடத்தப்படும் "இ.எம்.சோனா' என்ற இரு நாள்கள் பயிலரங்கில் தில்லி எய்ம்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவு மருத்துவர்கள் தலைமையில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பயிலரங்கை புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடி சனிக்கிழமை தொடக்கிவைத்தார்.
இதனைத் தொடர்ந்து, ஜிப்மர் இயக்குநர் (பொ) விஷ்ணுபட் சிறப்புரையாற்றினார். அப்போது அவர், ஜிப்மர் அவசர சிகிச்சைப் பிரிவின் முக்கியத்துவம் அதன் செயல்பாடுகள் குறித்து விளக்கினார்.
பயிலரங்கின் முக்கியத்துவம் குறித்து தற்போதைய அவசர சிகிச்சைப் பிரிவு தலைமை மருத்துவர் வினய் பண்டிட் விளக்கினார். அப்போது அவர், பாய்ன்ட் ஆப் கேர் அல்ட்ரா சோனாகிராபி என்னும் அதிநவீனத் தொழில்நுட்பக் கருவியின் மூலம் நோயின் தன்மையை மிக விரைவாகவும், துல்லியமாகவும் கண்டறிந்து அதற்கான சிகிச்சையை அளிக்க முடியும்.
இதுபோன்ற பயிலரங்குகள் வரும் காலங்களில் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை நடத்தவும் திட்டமிடபட்டுள்ளது. ஜிப்மர் அவசர சிகிச்சைப் பிரிவு நாட்டில் சிறந்த அவசர சிகிச்சைப் பிரிவாக விரைவில் மாறும் என்றார். பயிலரங்குக்கான ஏற்பாடுகளை அவசர சிகிச்சைப் பிரிவின் தலைமை மருத்துவர் வினய் பண்டிட், மருத்துவர் சுரேந்தர் ஆகியோர் செய்திருந்தனர். இந்தப் பயிலரங்கம் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 15) நிறைவு பெறுகிறது.