தனியார் துறை பெண் ஊழியர்களும் புகார் தெரிவிக்க உள்ளூர் குழு தேவை: மாதர் சங்கம் வலியுறுத்தல்
தனியார் துறை பெண் ஊழியர்களும் புகார் தெரிவிக்கும் வகையில் உள்ளூர் புகார் குழு அமைக்க வேண்டும் என்று அனைத்து இந்திய மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தனியார் துறை பெண் ஊழியர்களும் புகார் தெரிவிக்கும் வகையில் உள்ளூர் புகார் குழு அமைக்க வேண்டும் என்று அனைத்து இந்திய மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து சங்கத்தின் புதுச்சேரி பிரதேச தலைவர் சந்திரா,
செயலர் சத்யா ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புதுச்சேரியில் பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு பாலியல் ரீதியான தொந்தரவுகள் இருந்து வருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் தெரிவிக்க அனைத்து அரசுத் துறையிலும், தனியார் நிறுவனங்களிலும் சட்டத்தின் அடிப்படையில் புகார் குழுக்கள் அமைக்க வலியுறுத்தினோம்.
அதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் குழு அமைக்கப்பட்டது. ஆனால், அதற்கான ஆணை பிறப்பிக்கவில்லை. இதனால் அந்தக் குழு கால்நடைத் துறை முன்னாள் இயக்குநர் பத்மநாபனை விசாரணைக்கு அழைத்தபோது, அதிகாரம் இல்லாத குழு எனத் தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் தடையாணை பெற்றுள்ளார். எனவே, உடனடியாக அந்தக் குழுவை அதிகாரமுள்ளதாக மாற்ற வேண்டும்.
10-க்கும் மேற்பட்ட பெண்கள் வேலை செய்யும் தனியார் நிறுவனங்களில் பாலியல் தொல்லைக்கு உள்ளாவோர் புகார் அளிக்க புகார் குழு அமைக்க வேண்டும்.
புதுச்சேரி அளவில் அரசால் அமைக்கப்படும் குழுவில் செயல்படும் மாதர் சங்கங்களைச் சேர்ந்தவர்களை உறுப்பினராக சேர்க்க வேண்டும். அரசுத் துறைகள் மற்றும் தனியார் நிறுவனங்களிலும் பாலியல் புகார் குழுக்கள் அமைக்க வேண்டும் என்றனர்.