மனதில் இருக்கும் சக்தியை பயன்படுத்த வேண்டும்: சுவாமி ஓங்காரநந்தா
மனதில் இருக்கும் சக்தியை ஒவ்வொருவரும் பயன்படுத்த வேண்டும் என்று ஓங்கார ஆஸ்ரம மகாதிபதி தவத்திரு சுவாமி ஓங்காரநந்தாஅருளாசி வழங்கினார்
மனதில் இருக்கும் சக்தியை ஒவ்வொருவரும் பயன்படுத்த வேண்டும் என்று ஓங்கார ஆஸ்ரம மகாதிபதி தவத்திரு சுவாமி ஓங்காரநந்தாஅருளாசி வழங்கினார்.
புதுச்சேரி ஓங்கார ஆஸ்ரமம் சார்பில் புதுச்சேரி காந்தி திடலில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற 47-ஆவது ஆண்டு சித்ரா பெளர்ணமி வெட்ட வெளி தியானத்தை தலைமை வகித்து நடத்திய அவர் வழங்கிய அருளாசியுரை:
கோடிக்கணக்கில் பணம் சேர்த்து வைப்பதால் எந்த பயனும் இல்லை. நாட்டுப்பற்று இல்லாதவர்கள் தான் இதுபோல பணத்தை சேர்த்து வைக்கின்றனர்.
நுண்ணறிவு இருந்தால் தான் அங்க அசைவுகளை கண்காணிக்க முடியும். அப்போது தான் உயிரை பாதுகாக்க முடியும்.
புதுச்சேரியை பொருத்தவரை 32 ஆன்மிக குருக்கள் வாழ்ந்தனர். ஆன்மிக அலைவரிசை கொண்ட மண் இது. இங்கு வந்தாலே மனம் அமைதியாகிவிடும்.
நம் மனதில் உள்ள தீய எண்ணங்களை அகற்றிவிட்டு, நல்ல எண்ணங்களை புகுத்த வேண்டும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில், அகில பாரதீய துறவியர்கள் சங்கச் செயலர் சுவாமி ராமானந்தா பேசுகையில், பாரதம் ஞானம் பிறந்த பூமி. உலகில் உள்ள அனைத்து மதத்தினரும் இங்கு ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.
மனிதனும் தெய்வமாகாலாம் என்ற நம்பிக்கையும் இங்கு தான் உள்ளது. இயற்கையை தெய்வமாக வழிபடும் அற்புத கலையை கற்றுக்கொடுத்தது பாரத நாடு தான் என்றார் அவர்.
நிகழ்ச்சியில் முதல்வரின் நாடாளுமன்ற செயலர் க.லட்சுமிநாராயணன், மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரி முதல்வர் ஆர்.நாகராஜன், பொருளாதாரத் துறை தலைவர் எஸ்.ராமசாமி, வேலூரைச் சேர்ந்த பாஸ்காரனந்தா, சி.சாம்பசிவம், சிவத்திரு குமார் ராவகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.