மின்வயரில் விழுந்த பட்டத்தை எடுத்த சிறுவன் மின்சாரம் பாய்ந்து காயம்
புதுச்சேரியில் மின்வயரில் அறுந்து விழுந்த பட்டத்தை எடுக்க முயன்ற சிறுவன் மின்சாரம் பாய்ந்ததில், தூக்கி வீசப்பட்டு காயமடைந்தார்.
புதுச்சேரியில் மின்வயரில் அறுந்து விழுந்த பட்டத்தை எடுக்க முயன்ற சிறுவன் மின்சாரம் பாய்ந்ததில், தூக்கி வீசப்பட்டு காயமடைந்தார்.
புதுச்சேரி உருளையன்பேட்டை பிள்ளைத்தோட்டம், திருவள்ளுவர் சாலையைச் சேர்ந்தவர் பெருமாள். சலவைத் தொழிலாளி. இவரது மகன் ரகு (10). அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 4- ஆம் வகுப்பு படித்து வருகிறார். சனிக்கிழமை ரகு, பக்கத்து வீட்டில் வசிக்கும் தனது நண்பர் கார்த்திக்குடன் சேர்ந்து வீட்டின் மொட்டை மாடியில் பட்டம் விட்டுக்கொண்டிருந்தார்.
அப்போது, பட்டம் அறுந்து மின் கம்பியில் விழுந்தது. உடனே ரகு அந்த பட்டத்தை எடுக்க முயன்றுள்ளார்.
அப்போது மின்சாரம் பாய்ந்ததில் அவர் தூக்கி வீசப்பட்டார். உடனே அப்பகுதியை சேர்ந்தவர்கள் ரகுவை மீட்டு புதுவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து உருளையன்பேட்டை காவல் நிலைய காவலர்கள் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.