சாலை விபத்தில் தலைமை ஆசிரியை சாவு
புதுச்சேரியில் பைக்குகள் மோதிக் கொண்டதில் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை உயிரிழந்தார்.
புதுச்சேரியில் பைக்குகள் மோதிக் கொண்டதில் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை உயிரிழந்தார்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகரைச் சேர்ந்தவர் ஜெயந்தன் (59). வைத்திக்குப்பம் அரசுப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக உள்ளார். இவரது மனைவி ஜெயமேரி (55). சிவராந்தகம் பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
இவர் தினமும் கணவருடன் மோட்டார் சைக்கிளில் பேருந்து நிலையம் சென்று, அங்கிருந்து சிவராந்தகத்துக்கு பேருந்தில் செல்வது வழக்கம். அதுபோல, புதன்கிழமை காலை ஜெயமேரி பள்ளிக்குச் செல்வதற்காக தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.
அவர்கள் அண்ணா சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, செயின்ட் தெரேஸ் வீதியில் இருந்து இளைஞர் ஒருவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், ஜெயந்தனின் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த ஜெயமேரிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அருகில் இருந்தவர்கள் ஜெயமேரியை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் உயிரிழந்தார்.
இது குறித்து போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் வெங்கடேசன், தலைமைக் காவலர் நாகராஜன் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.