முகப்பு
புதுச்சேரி

ஏசி கம்ப்ரசர் வெடித்ததில் பெண் உள்பட 3 பேர் காயம்

புதுச்சேரியில், வீட்டில் ஏசி கம்ப்ரசர் வெடித்துச் சிதறியதில் பெண் உள்பட 3 பேர் காயமடைந்தனர்.

Updated On : 29 மார்ச், 2018 at 8:55 AM
பகிர்:

புதுச்சேரியில், வீட்டில் ஏசி கம்ப்ரசர் வெடித்துச் சிதறியதில் பெண் உள்பட 3 பேர் காயமடைந்தனர்.
 புதுச்சேரி திப்புராயப்பேட்டை லாசர் கோயில் வீதியைச் சேர்ந்தவர் தேவதாஸ் (57). இவர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றரை டன் ஸ்பிலிட் ஏசி வாங்கினார். இரு மாதங்களுக்கு முன்பு இந்த ஏசி பழுதடைந்தது. இதனை சரிசெய்ய, உருளையன்பேட்டை முத்தமிழ் நகரில் உள்ள தனியார் ஏசி சர்வீஸ் நிறுவனத்தை தேவதாஸ் கடந்த 2 நாள்களுக்கு முன்பு அணுகினார்.
 இதையடுத்து, அந்த நிறுவன ஊழியர்கள் முத்தமிழ் நகரைச் சேர்ந்த பிரகாஷ் (20), விக்கிரவாண்டியைச் சேர்ந்த பழனிவேல் (24) ஆகிய இருவரும் தேவதாஸ் வீட்டுக்குச் சென்று ஏசி இயந்திரத்தைப் பார்த்த போது, வீட்டின் வெளியே பொருத்தப்பட்டிருந்த அவுட்டோர் யூனிட் பழுதாகி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் அவுட்டோர் யூனிட்டை கழற்றி புதன்கிழமை சரிசெய்து எடுத்து வந்து, அதை தேவதாஸ் வீட்டுக்குச் சென்று ஏசி இயந்திரத்தில் பொருத்தினர்.
 அப்போது, எதிர்பாராதவிதமாக ஏசி கம்ப்ரசர் பயங்கர சப்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதில் பிரகாஷ், பழனிவேல் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். மேலும், வீட்டில் முன்பக்கம் இருந்த சமையல் அறை மேல் வேயப்பட்டிருந்த ஆஸ்பெஸ்டாஸ் சீட் உடைந்து சிதறி விழுந்தது. இதில் வீட்டில் இருந்த அமலோர்மேரிக்கு லேசான காயம் ஏற்பட்டது.
 சப்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் காயமடைந்தவர்களை மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த தொகுதி எம்எல்ஏ ஆ.அன்பழகன், கிராம நிர்வாக அதிகாரி கதிர்வேல் ஆகியோர் சென்று காயமடைந்தவர்களை பார்வையிட்டு ஆறுதல் கூறினர். இந்த சம்பவம் குறித்து ஒதியஞ்சாலை காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.