அரசு மருத்துவமனையில் குழந்தை சாவு
காரைக்கால் அரசு பொதுமருத்துவமனையில் பிறந்து 4 நாள்களேயான குழந்தை திடீரென இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது உறவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
காரைக்கால் அரசு பொதுமருத்துவமனையில் பிறந்து 4 நாள்களேயான குழந்தை திடீரென இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது உறவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம், அர்ச்சனா தம்பதிக்கு ஓர் ஆண் குழந்தை உள்ளது. 2 -ஆவது பிரசவத்துக்காக அர்ச்சனாவை காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை பெண் குழந்தை பிறந்துள்ளது. இது தகுதியான எடையில் இருந்த நிலையில், வேறு சில காரணத்துக்காக குழந்தையை இன்குபேட்டர் பிரிவில் வைத்து பராமரித்து வந்துள்ளனர். இந்நிலையில், திங்கள்கிழமை காலை குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகத்தினர் உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர். இதையொட்டி, குடும்பத்தினர் மற்றும் அவர்களது உறவினர்கள் மருத்துவமனையில் திரண்டனர். இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் பி. சித்ராவிடம் குடும்பத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். காரைக்கால் நகரக் காவல்நிலைய போலீஸார் மருத்துவமனைக்குச் சென்று மருத்துவமனை நிர்வாகத்தினர், குழந்தையின் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், இறந்த குழந்தையைப் பெற்றுக்கொள்ள சம்மதித்தனர்.