தமிழகத்தில் தூர்வாரும் பணி முறையாக நடைபெறவில்லை: டிடிவி தினகரன் புகார்
தமிழகத்தில் கால்வாய்கள் தூர்வாரும் பணி முறையாக நடைபெறவில்லை என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலர் டிடிவி தினகரன் எம்எல்ஏ குற்றஞ்சாட்டினார்.
தமிழகத்தில் கால்வாய்கள் தூர்வாரும் பணி முறையாக நடைபெறவில்லை என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலர் டிடிவி தினகரன் எம்எல்ஏ குற்றஞ்சாட்டினார்.
புதுச்சேரியில் கட்சி நிர்வாகி திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் திங்கள்கிழமை இரவு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கஜா புயலால் தமிழகம், புதுவை கடுமையாக பாதிக்கப்படும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அமைச்சர்கள் கூறி வருகின்றனர். ஆனால், சென்னையில் உள்ள அடையாறு, பக்கிங்காம் கால்வாய் ஆகியவை தூர்வாரப்படாமல் உள்ளன.
தமிழகத்தில் கால்வாய்களை முறையாக தூர்வாரவில்லை என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் மாநில அரசுக்கு சனிக்கிழமை அபராதம் விதித்தது.
தமிழகத்தில் எந்தப் பகுதியிலும் தூர்வாரும் பணி முறையாக நடைபெறவில்லை; அமைச்சர்கள் பொய்த் தகவல்களை தெரிவிக்கின்றனர். தமிழக அரசு மழை, புயல் காலத்தில் மெத்தனப் போக்கை கையாளுகிறது. மக்களை பாதுகாக்கும் செயலில் அரசு ஈடுபட வேண்டும் என்றார் டிடிவி தினகரன்.
மதச்சார்பற்ற அணி தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், திமுக இடம் பெற்றிருக்கும் கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஒருபோதும் இணையாது. மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக தேர்தல் நேரத்தில் முடிவு எடுப்போம் என்றார்.
7 பேர் விடுதலை தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ள கருத்து குறித்த கேள்விக்கு, அரசியல் கட்சி தொடங்காத ஒருவர், 7 பேர் யாரென்று தெரியாது எனக் கூறுவது தொடர்பாக மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்றார் டிடிவி தினகரன்.