கூடுதலாக பெண் காவலர்களை நியமிக்க பாஜக வலியுறுத்தல்
புதுவையில் கூடுதலாக பெண் காவலர்களை நியமிக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியது.
புதுவையில் கூடுதலாக பெண் காவலர்களை நியமிக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியது.
லாசுப்பேட்டை தொகுதி பாஜக சார்பில் செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் அந்தத் தொகுதித் தலைவர் சந்துரு தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் சாமிநாதன் எம்எல்ஏ, பொதுச் செயலர்கள் தங்க விக்ரமன், ரவிச்சந்திரன், எம்எல்ஏக்கள் எஸ்.செல்வ கணபதி, கே.ஜி.சங்கர், மாவட்டத் தலைவர் சிவானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் லாசுப்பேட்டை தொகுதிக்கு உள்பட்ட சேதமடைந்த சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும். தெரு மின் விளக்குகள், உயர்கோபுர விளக்குகளைச் சரி செய்ய வேண்டும். அனைத்து மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகளையும் சுத்தம் செய்து சுகாதாரமான முறையில் குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
பள்ளி, கல்லூரிகள் நிறைந்த லாசுப்பேட்டையில் மாணவிகளின் பாதுகாப்புக் கருதி கூடுதலான பெண் காவலர்களை நியமிக்க வேண்டும். தொற்றுநோய் பரவாமல் இருக்க கொசு மருந்து அடிக்க வேண்டும். வள்ளலார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிய வகுப்புகள் தொடங்க வேண்டும். துப்புரவுப் பணியாளர்களுக்கு தரமான கையுறை, காலுறைகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.