கோயில் உண்டியலை உடைத்து திருட முயற்சி
திருபுவனை அருகே கோயில் உண்டியலை உடைத்து திருட முயன்ற சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
திருபுவனை அருகே கோயில் உண்டியலை உடைத்து திருட முயன்ற சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரியை அடுத்த திருபுவனை அருகே உள்ள திருபுவனைபாளையம் கிராமத்தில் சர்வ சித்தி விநாயகர் கோயில் அமைந்துள்ளது.
இந்தக் கோயிலில் கடந்த அக். 4-ஆம் தேதி குருபெயர்ச்சி விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து, உண்டியலில் காணிக்கை செலுத்தினர்.
இந்த நிலையில், சனிக்கிழமை வழக்கம் போல கோயில் அர்ச்சகர் சுவாமிக்கு பூஜை செய்துவிட்டு, பூட்டிவிட்டுச் சென்றார். நள்ளிரவில் மர்ம நபர்கள் கோயிலின் உள்ளே புகுந்து அங்கிருந்த உண்டியல் பூட்டை உடைக்க முயன்றுள்ளனர். பூட்டை உடைக்க முடியாததால் அங்கிருந்து தப்பிச் சென்றனர். ஞாயிற்றுக்கிழமை காலை வந்து பார்த்த போது, உண்டிலை உடைக்க முயற்சி நடந்தது தெரிய வந்தது. இதுகுறித்து திருபுவனை போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
காவல் உதவி ஆய்வாளர் பிரியா உள்ளிட்ட போலீஸார் கோயிலுக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தொடர்ந்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.