கோவாவைப் போல புதுவையிலும் கேசினோ (கப்பலில் நடத்தப்படும் சூதாட்டத்துடன் கூடிய மனமகிழ் மன்றம்) விரைவில் அமல்படுத்தப்படும் என்று புதுவை சுற்றுலாத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் தெரிவித்தார்.
புதுவை அரசின் சுற்றுலாத் துறை சார்பில், புதுச்சேரியில் வியாழக்கிழமை நடைபெற்ற "புதுவை சுற்றுலாவில் உள்ள சவால்களும், வாய்ப்புகளும்' என்ற தலைப்பிலான கருத்தரங்கை தொடக்கிவைத்து அவர் பேசியதாவது:
மத்திய அரசின் நிதியுதவியுடன் தற்போது புதுவையில் ரூ. 183 கோடியில் வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மத்திய அரசிடமிருந்து சுற்றுலாத் துறைக்கு அதிக நிதி பெற்ற மாநிலம் புதுவைதான். இன்னும் 2 மாதங்களில் மேலும் ரூ. 230 கோடியிலான வளர்ச்சிப் பணிகளுக்கு நிதி கோரி கருத்துரு அனுப்ப உள்ளோம்.
சுற்றுலா, பெட்ரோலியப் பொருள்கள் மீதான விற்பனை வரி, மது விற்பனை ஆகியவை மூலம்தான் புதுவைக்கு 32 சதவீத வருவாய் கிடைக்கிறது.
பெட்ரோல், டீசல் மீதான வரியை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வந்தால் புதுவைக்கு வருவாய் பாதிக்கப்படும்.
சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு சுற்றுலாப் பயணிகள் கப்பல் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கோவாவைப் போல, கேசினோ திட்டமும் விரைவில் அமல்படுத்தப்படும். நீர் விளையாட்டுகளை அறிமுகம் செய்யவும் முடிவு செய்துள்ளோம்.
புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கம் தொடர்பாக இன்னும் ஒரு வாரத்துக்குள் தமிழக - புதுவை சுற்றுலாத் துறை அமைச்சர்கள், தலைமைச் செயலர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
புதுச்சேரியில் இருந்து ஹைதராபாத், பெங்களூர் விமான சேவை வெற்றி அடைந்துள்ளது. அதேபோல, புதுச்சேரியில் இருந்து திருப்பதி, கொச்சிக்கு விரைவில் விமான சேவை தொடங்கப்படும் என்றார் அவர்.
கருத்தரங்கில் சுற்றுலா வளர்ச்சிக் கழகத் தலைவர் எம்.என்.ஆர்.பாலன், சுற்றுலாத் துறைச் செயலர் ப.பார்த்திபன், இந்திய சுற்றுலா சங்கத் தலைவர் ஸ்டீவ் பார்கியா, சுற்றுலா இயக்குநர் எல்.முகமது மன்சூர் உள்பட வெளிநாட்டு பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.