"ஐஐபிகேஎல்' என்ற சர்வதேச கபடி போட்டியில் பங்கேற்கும் புதுவை மாநில கபடி அணிக்கு புதுச்சேரியில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
சர்வதேச கபடி கூட்டமைப்பின் அனுமதியுடன் "ஐஐபிகேஎல்' சர்வதேச கபடி போட்டி நடைபெற உள்ளது. இந்தப் போட்டிகள் புனே, மைசூர், பெங்களூரு ஆகிய இடங்களில் மே 18 -ஆம் தேதி முதல் தொடங்கி ஜூன் 4 -ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் புதுவை மாநிலம் சார்பில் முதல் முறையாக "பாண்டிச்சேரி பிரிடேட்டர்ஸ்' அணி பங்கேற்று விளையாட உள்ளது.
இந்த அணி வீரர்களுக்கான பயிற்சி முகாம் ராஜீவ் காந்தி உள் விளையாட்டரங்கில் மே 5 -ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
பயிற்சியை புதுவை மாநில நியூ கபடி சங்கத் தலைவர் ஏம்பலம் ஆர்.செல்வம், "பாண்டிச்சேரி பிரிடேட்டர்ஸ்' அணியின் நிர்வாக இயக்குநர் டி.வின்சென்ட்ராஜ் ஆகியோர் தொடக்கி வைத்தனர்.