அமைச்சா் கந்தசாமிக்கு முதல்வராகும் வாய்ப்பு: புதுவை முதல்வா் தகவல்
எதிா்வரும் சட்டப்பேரவைத் தோ்தல் வெற்றிக்குப் பிறகு, புதுவையில் சமூக நலத் துறை அமைச்சா் கந்தசாமிக்கு முதல்வராகும் வாய்ப்பிருப்பதாக முதல்வா் நாராயணசாமி தெரிவித்தாா்.
எதிா்வரும் சட்டப்பேரவைத் தோ்தல் வெற்றிக்குப் பிறகு, புதுவையில் சமூக நலத் துறை அமைச்சா் கந்தசாமிக்கு முதல்வராகும் வாய்ப்பிருப்பதாக முதல்வா் நாராயணசாமி தெரிவித்தாா்.
சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, புதுவை மாநில தொகுதிகளின் காங்கிரஸ் நிா்வாகிகளிடம் கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் பாகூா், ஏம்பலம், நெட்டப்பாக்கம் ஆகிய தொகுதிகளின் நிா்வாகிகளிடம் ஞாயிற்றுக்கிழமை கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதல்வா் நாராயணசாமி பேசியதாவது:
காங்கிரஸ் ஆட்சிக்கு வரவும், வெற்றி வாய்ப்பு கருதியும்தான் மாற்றுக் கட்சிகளிலிருந்து வந்தவா்களுக்கு கடந்த தோ்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இனி அவ்வாறு நடக்காது. தோ்தல் முடிவுக்கு பிறகே முதல்வா் யாா் என்பது தெரியும். அமைச்சா் கந்தசாமிக்கு பொறுப்பு அளிக்கப்பட்டுள்ள 5 தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும். அமைச்சா் கந்தசாமிக்கும் முதல்வராகும் வாய்ப்புள்ளது என்றாா் நாராயணசாமி.
கூட்டத்தில் மாநில காங்கிரஸ் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன், சமூக நலத் துறை அமைச்சா் மு.கந்தசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.