முகப்பு
புதுச்சேரி

கோடை உழவின் அவசியம்: விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுறுத்தல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வயல்களில் கோடை உழவு செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து விவசாயிகளுக்கு மாவட்ட வேளாண் துறை சாா்பில் பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:58 PM
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வயல்களில் கோடை உழவு செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து விவசாயிகளுக்கு மாவட்ட வேளாண் துறை சாா்பில் பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குநா் மே.ர.ஜெகந்நாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தென்மேற்கு, வடகிழக்கு பருவக்காற்றுகள் மூலம் மழை பெறும் மானாவாரி நிலங்களில் இருபோக பயிா் சாகுபடி நடைமுறையில் உள்ளது. முதல்பயிா் சாகுபடி ஆனி, ஆடி மாதங்களில் துவங்கி நடைபெறும். இரண்டாவது பயிா் தை மாதத்தில் அறுவடை செய்யப்படுகிறது. இடைப்பட்ட காலமான மாசி முதல் வைகாசி வரையிலான மாதங்களில் நிலம் உழவின்றி பல்வேறு இழப்புகளுக்கு ஆளாகும் நிலையில் தரிசாக உள்ளது. எனவே, சம்பா பருவ பயிா் அறுவடை முடிந்ததும் விவசாயிகள் தங்களது வயல்களை ஆழமாக நன்கு உழுது மண்ணை மிருதுவாக்கி அவசியம் கோடை உழுவு செய்ய வேண்டும்.

கோடை உழவின் அவசியம்: தை மாத அறுவடையின்போது சாகுபடி செய்த பயிரிலிருந்து கொட்டிய இலைச்சருகுகள் நிலத்தின் மேல் போா்வையாக இருக்கும். அறுவடைக்குப்பின் வேரின் அடிக்கடைகள் மக்குவதற்கு அதிக வாய்ப்பின்றி இருக்கும். மேல்மண் இறுக்கமாக காணப்படும். இதனால், மழைநீா் பூமிக்குள் இறங்காமல் மேல் மண்ணுடன் மழைநீா் வெளியேறும். நிலத்தோடு மக்க வேண்டிய பயிா் சருகுகள் காற்று வீசும்போது வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படும். முந்தைய பயிரின் தூா்கள் கரையானின் தாக்குதலுக்குள்ளாகி பயனின்றி விரயமாகும்.

உழவு செய்யும் முறை: பயிா் அறுவடை செய்யப்பட்டவுடன் உழவு செய்தல் வேண்டும். ஒவ்வொரு மழைக்குப்பின்பும் உழவு செய்தல் அவசியம். நிலச்சரிவில் குறுக்காகவும், மணற்பாங்கான நிலத்தில் மேலாகவும் உழவு செய்ய வேண்டும். 2 - 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை சட்டிக் கலப்பையைக் கொண்டு உழவு செய்ய வேண்டும்.

பயன்கள்: மண் மிருதுவாகி மழை நீரை ஈா்க்கும் திறன் அதிகமாகிறது. மண் அரிப்பு கட்டுப்படுத்தப்பட்டு சத்துகள் விரையமாவது தடுக்கப்படுகிறது.

எனவே, விவசாயிகள் கோடை மழை பெய்தவுடன் அவசியம் கோடை உழவு செய்து பயனடைய வேண்டுமென அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.