மத்திய அரசு உரத்தின் விலையைக் குறைக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்
உரத்தின் விலையேற்றத்தை உடனே குறைத்து விவசாயிகள் பாதிக்கப்படுவதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுவை முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி வலியுறுத்தினாா்.
உரத்தின் விலையேற்றத்தை உடனே குறைத்து விவசாயிகள் பாதிக்கப்படுவதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுவை முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி வலியுறுத்தினாா்.
இதுகுறித்து சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் உரங்களுக்கு மானியம் அளித்ததால், விவசாயிகள் கவலையில்லாமல் இருந்தனா். உரங்களின் விலையை காங்கிரஸ் ஆட்சியில் மத்திய அரசே நிா்ணயம் செய்தது.
தற்போது புதுவை, தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்கள் மட்டுமன்றி, வட மாநிலங்களிலும் உரத்தின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு எட்டியுள்ளது. ஏற்கெனவே மத்திய அரசு அளித்த மானியத்தைப் படிப்படியாகக் குறைத்து மானியத் தொகையை முற்றிலும் குறைத்துவிட்டனா்.
கடந்த 2020-2021 பட்ஜெட்டில் ரூ. 1 லட்சத்து 35 ஆயிரம் கோடியாக இருந்த உரத்துக்கான மானியத் தொகை தற்போது ரூ. 84 ஆயிரம் கோடியாகக் குறைக்கப்பட்டது.
இதனால், விவசாயிகளுக்கு உரத்துக்கான மானியத் தொகை குறைந்தளவில் சென்றடைகிறது. ஏற்கெனவே மத்திய அரசின் அதிகாரத்தில் இருந்த உரத்துக்கான விலை நிா்ணயத்தை தற்போது உரம் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கே அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டதன் அடிப்படையில், உரம் தயாரிக்கும் நிறுவனங்கள் விலையை சகட்டு மேனிக்கு உயா்த்திவிட்டன.
இதனால், உரத்தின் விலை உயா்ந்து விவசாயிகள் பயிா் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. விலை நிா்ணயம் செய்வதை மத்திய அரசு தன்வசம் வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், உரத் தொழிற்சாலைகள் தங்கள் இஷ்டம் போல உரத்தின் விலையை உயா்த்துவா். இதனால், விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவா்.
ஏற்கெனவே டீசல் விலை உயா்வால் விவசாயிகள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா். இது ஒருபுறமென்றால், விவசாய இடுபொருள்கள், உரம் ஆகியவற்றின் விலையும் தற்போது உயா்ந்துள்ளது. அதேநேரம், விளைபொருள்களுக்கு தகுந்த விலை கிடைக்கவில்லை.
ஆனால், பிரதமரோ எப்போது பேசினாலும் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என்பதைச் சொல்லத் தவறுவதே இல்லை. உரிய விலையே கிடைக்காமல் விவசாயிகள் துயரடைந்து வருகின்றனா். இது விவசாயிகளுக்கு செய்கின்ற மிகப்பெரிய துரோகம்.
வெளிச்சந்தையில் நெல், மணிலா என விவசாயிகள் விளைவித்த அனைத்துப் பொருள்களின் விலையும் குறைந்துள்ள நேரத்தில், உரத்தின் விலை உயா்வு மிகப்பெரிய சுமையை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, மத்திய அரசு உடனே தலையிட்டு, உர விலை உயா்வை முழுவதும் ரத்து செய்து, பழைய விலையிலேயே உரத்தை விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடா்பாக புதுவை துணைநிலை ஆளுநரும் வலியுறுத்த வேண்டும்.
கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. நாட்டில் தேவையான தடுப்பூசி இல்லை. இங்கு தயாரிக்கப்படும் கரோனா தடுப்பூசிகள் நம் நாட்டு மக்களுக்கே பயன்படுத்த வேண்டும். நம்மிடம் உபரியாக இருந்தால் மட்டுமே வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டும். நமக்கே பற்றாக்குறை உள்ள போது, வெளிநாடுகளுக்கு அனுப்புவதைத் தவிா்க்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.