மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தை தற்காலிகமாக மூடப்பட்டது
மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் முகக் கவசம் அணியாமல் அதிக கூட்டம் கூடியதால் சந்தையை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ் சேகர் உத்தரவிட்டார்.
மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் முகக் கவசம் அணியாமல் அதிக கூட்டம் கூடியதால் சந்தையை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ் சேகர் உத்தரவிட்டார்.
தமிழகத்தில் கரோனா தொற்று பரவலானது திடீரென அதிகரித்து வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
மதுரையின் முக்கிய கோயில்களான மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில், அழகர்கோவில் கள்ளழகர் கோயில், பழமுதிர்ச்சோலை உள்ளிட்ட கோயில்களில் இன்று முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி இல்லை என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாமே| ஆம்பூர் அருகே சரக்கு ரயில் பழுது: ஆங்காங்கே நிறுத்தப்பட்ட ரயில்கள்
இதனிடையே மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ் சேகர் திங்கள்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது சந்தையில் வியாபாரிகள், மலர் விவசாயிகள், மலர்கள் வாங்க வந்த பொதுமக்கள் என பெரும்பாலானோர் முகக்கவசம் அணியாமல் அதிக கூட்டமாக கூடி இருந்தனர். ஆகவே, கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மலர் சந்தையை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் ஏற்கனவே பொதுமக்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்ட நான்கு கோயில்களுடன் பாண்டி முனீஸ்வரர் கோயில், தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் முக்தீஸ்வரர் கோயில், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில், குருவித்துறை குருபகவான் கோயில் உள்பட 22 கோயில்களில் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை பொதுமக்களின் தரிசனம் செய்ய அனுமதி இல்லை எனவும் அறிவித்துள்ளார்.
மாட்டுத்தாவணி மத்திய காய் கனி சந்தை, பரவை மொத்த காய் கனி விற்பனை சந்தை ஆகியவற்றில் சில்லறை விற்பனைக்கு தடை விதிக்கப்படுகிறது எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.