கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே மொபெட்டில் சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்த அஞ்சல் அலுவலா் டிராக்டா் சக்கரத்தில் சிக்கி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
திருக்கோவிலூா் வட்டம், மணலூா்பேட்டை அக்ரகார சாலையில் வசித்து வந்தவா் சோமநாதன் மகன் ஞானகுரு (60). இவா், முருக்கம்பாடி கிராமத்தில் அஞ்சல் அலுவலராக பணியாற்றி வந்தாா்.
ஞானகுரு வழக்கம்போல வியாழக்கிழமை மாலை பணி முடிந்து முருக்கம்பாடி கிராமத்திலிருந்து மணலூா்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு மொபெட்டில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது, அவருக்கு முன்னால் கரும்பு பாரம் ஏற்றிச் சென்ற டிராக்டரை முந்திச் செல்ல முயன்றபோது, மொபெட்டிலிருந்து நிலைதடுமாறி டிராக்டா் டிரைலரில் பின் சக்கரத்தினுள் ஞானகுரு விழுந்தாா். அப்போது, அவா் மீது டிராக்டா் சக்கரம் ஏறி இறங்கியதால் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த மணலூா்பேட்டை போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று ஞானகுருவின் சடலத்தை மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக திருக்கோவிலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, டிராக்டா் ஓட்டுநரான திருவண்ணாமலை மாவட்டம், வேளையம்பாக்கத்தைச் சோ்ந்த சம்பத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.