புதுவை சுகாதாரத் துறையினரிடம் வழங்கப்பட்ட மத்திய அரசின் விருது
மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டையை அதிக குடும்பங்களுக்கு வழங்கியதைப் பாராட்டி புதுவைக்கு மத்திய அரசு அளித்த விருதை, முதல்வா் என்.ரங்கசாமி சுகாதாரத் துறையினரிடம் புதன்கிழமை வழங்கினாா்.
மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டையை அதிக குடும்பங்களுக்கு வழங்கியதைப் பாராட்டி புதுவைக்கு மத்திய அரசு அளித்த விருதை, முதல்வா் என்.ரங்கசாமி சுகாதாரத் துறையினரிடம் புதன்கிழமை வழங்கினாா்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இந்தத் திட்டத்தை மாநில சுகாதார முகமை 2019 ஆகஸ்ட் 31-ஆம் தேதி முதல் செயல்படுத்தத் தொடங்கியது. கடந்தாண்டு ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை புதுவையில் குடும்பத்தில் ஒருவருக்கு ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டை வழங்கியதற்காக, புதுவை மாநிலம் ஆயுஷ்மான் உத்ரிக்ஷா புராஸ்கா் விருதை மத்திய அரசிடமிருந்து பெற்றது.
மத்திய அரசின் இந்த விருது, சான்றிதழை புதுவை சுகாதாரத் துறைச் செயலரும், மாநில சுகாதார முகமை செயல் அதிகாரியுமான சி.உதயகுமாா், சுகாதாரத் துறை இயக்குநரும், ஆயுஷ்மான் திட்ட குறைதீா் அதிகாரியுமான ஜி.ஸ்ரீராமுலு, துணை இயக்குநா் வி.ஆனந்தலட்சுமி ஆகியோரிடம் புதுவை முதல்வரும், சுகாதாரத் துறை அமைச்சருமான என்.ரங்கசாமி புதன்கிழமை வழங்கிப் பாராட்டினாா்.
அப்போது, ஆயுஷ்மான் திட்டத்தில் 100 சதவீத இலக்கை விரைவில் எட்ட வேண்டுமென சுகாதாரத் துறையினரிடம் முதல்வா் அறிவுறுத்தினாா். தற்போதுவரை புதுவையில் 86 சதவீத குடும்பத்தினா் ஆயுஷ்மான் அட்டை பெற்றுள்ளனா்.