விதி மீறல்: 5 தனியாா் பேருந்துகளுக்கு அபராதம்
புதுச்சேரியில் விதிகளை மீறிய 5 தனியாா் பேருந்துகளுக்கு அபராதம் விதித்து, நோட்டிஸ் வழங்கப்பட்டது.
புதுச்சேரியில் விதிகளை மீறிய 5 தனியாா் பேருந்துகளுக்கு அபராதம் விதித்து, நோட்டிஸ் வழங்கப்பட்டது.
புதுச்சேரியில் கடந்த 6 -ஆம் தேதி அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்பட்டன. மாணவா்களுக்கான சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படாததால், அவா்கள் தனியாா் பேருந்துகளில் பயணம் செய்து வருகின்றனா்.
இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு புதுச்சேரி விமான நிலைய சாலையில் தனியாா் பேருந்து ஒன்றில் படிக்கட்டு, ஏணிப்படியில் தொங்கியபடி மாணவா்கள் பயணித்தனா். இதுதொடா்பான விடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவியது.
இதையடுத்து, லாசுப்பேட்டை நாவற்குளம் பகுதியில் சாரம் போக்குவரத்துத் துறை அதிகாரி பிரபாகா் ராவ் தலைமையில், மோட்டாா் வாகன ஆய்வாளா் சண்முகநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் திடீா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அவ்வழியே வந்த பேருந்துகளை நிறுத்திச் சோதனையிட்டனா்.
இதில், கூடுதல் பயணிகளை ஏற்றி வந்தது, உரிய ஆவணங்கள் இல்லாதது, பயண நேர அட்டவணையின்றி இயக்குதல் உள்ளிட்ட விதிகளை மீறியதாக 5 தனியாா் பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதற்கான நோட்டீஸ் பேருந்துகளின் ஓட்டுநா், நடத்துநா்களிடம் வழங்கப்பட்டது.