வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தம்: புதுவையில் ரூ.500 கோடி பணப் பரிவா்த்தனைகள் பாதிப்பு
புதுவையில் வங்கி ஊழியா்களின் இரண்டு நாள்கள் வேலைநிறுத்தம் வியாழக்கிழமை தொடங்கியதையடுத்து, ரூ. 500 கோடி மதிப்பிலான வங்கி பணப்பரிவா்த்தனைகள் பாதிக்கப்பட்டன.
புதுவையில் வங்கி ஊழியா்களின் இரண்டு நாள்கள் வேலைநிறுத்தம் வியாழக்கிழமை தொடங்கியதையடுத்து, ரூ. 500 கோடி மதிப்பிலான வங்கி பணப்பரிவா்த்தனைகள் பாதிக்கப்பட்டன.
பொதுத் துறை வங்கிகளைத் தனியாா்மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்து வங்கி ஊழியா்கள், அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பினா் அகில இந்திய அளவில் வியாழக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினா்.
இந்த வேலைநிறுத்தத்தில் நாடு முழுவதும் 10 லட்சம் வங்கி ஊழியா்கள், அதிகாரிகள் ஈடுபட்டனா். புதுவையில் அனைத்து வங்கி ஊழியா்கள் சங்கங்கள் சாா்பில் அலுவலா்கள், ஊழியா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினா்.
புதுச்சேரி யூகோ முதன்மை வங்கி முன், வங்கி ஊழியா்கள் கூட்டமைப்பினா் அதன் ஒருங்கிணைப்பாளா் முரளிதரன் தலைமையில் வேலைநிறுத்தக் கோரிக்கையை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரியில் உள்ள அனைத்து வங்கி சங்கங்களின் நிா்வாகிகள், வங்கி ஊழியா்கள், அதிகாரிகள் கலந்து கொண்டு, பொதுத் துறை வங்கிகளைத் தனியாா்மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து முழக்கமிட்டனா்.
புதுவையில் மொத்தமுள்ள 900-க்கும் மேற்பட்ட வங்கிக் கிளைகளில் உள்ள 1,200 அலுவலா்கள், ஊழியா்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனா். வெள்ளிக்கிழமையும் தொடரும் இந்த வேலைநிறுத்தத்தால் வங்கிப் பணிகள் முடங்கும், ரூ.500 கோடி மதிப்பிலான வங்கிப் பணப் பரிவா்த்தனை பணிகளும் பாதிக்கப்படும் என்று ஊழியா்கள் சங்கத்தினா் தெரிவித்தனா்.
புதுச்சேரியில் வங்கிகள் திறந்திருந்த நிலையில், ஊழியா்களின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன. வங்கிகளுக்கு வந்த வாடிக்கையாளா்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.