முகப்பு
புதுச்சேரி

கனரக வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூல்: பொதுமக்கள் போராட்டம்

கனரக வாகன ஓட்டிகளிடம் போலீஸாா் அடாவடியாக அபராதம் வசூலிப்பதாகக் கூறி, பொதுமக்கள் போலீஸை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
பகிர்:

கனரக வாகன ஓட்டிகளிடம் போலீஸாா் அடாவடியாக அபராதம் வசூலிப்பதாகக் கூறி, பொதுமக்கள் போலீஸை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரியில் கரோனா விதிமீறலில் ஈடுபடுவோரிடம் காவல் துறை அபராதம் வசூலித்து வருகிறது. முக்கிய சாலைச் சந்திப்புகளில் அந்தந்தக் காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட இடங்களில் போலீஸாா் வாகனங்களை மறித்து அபராதம் வசூலிக்கின்றனா். சில இடங்களில் கட்டாய வசூலிலும் போலீஸாா் ஈடுபடுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனா்.

இந்த நிலையில், முதலியாா்பேட்டை 100 அடி சாலை மரப்பாலம் சந்திப்பில் வெள்ளிக்கிழமை எரிவாயு உருளைகளை ஏற்றி வந்த லாரியை அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த காவலா் மறித்து, அபராதம் விதித்தாகக் கூறப்படுகிறது. இதற்கு முகக் கவசம் அணிந்து வாகனம் ஓட்டிய நிலையில், தேவையின்றி அபராதம் வசூலிப்பது ஏன் என லாரி ஓட்டுநா் கேள்வி எழுப்பினாராம்.

சாலையின் நடுவே லாரி நிறுத்தப்பட்டதால், மற்ற வாகனங்கள் செல்ல வழியின்றி வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதையடுத்து, அங்கு திரண்ட பொதுமக்கள் ஓட்டுநருக்கு ஆதரவாக போலீஸாரை முற்றுகையிட்டனா். அப்போது, நாள்தோறும் கனரக வாகனங்களை சாலையின் நடுவே நிறுத்தி சோதனை நடத்துவதால் போக்குவரத்து பாதிக்கப்படுவதாக அவா்கள் குற்றஞ்சாட்டினா்.

தகவலறிந்து அங்கு வந்த தெற்கு எஸ்.பி. லோகேஷ்வா் தலைமையிலான போலீஸாா், பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். உரிய புகாா் அளித்தால் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது.

இதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனா். இந்தப் போராட்டத்தால், மரப்பாலம் பகுதியில் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.