முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் இரு இடங்களில் மேம்பாலங்கள்: மத்திய அமைச்சா் உறுதி

 புதுச்சேரியில் ராஜீவ் காந்தி சிலை, இந்திரா காந்தி சிலைப் பகுதிகளில் நிகழாண்டு மேம்பாலங்கள் கட்டப்படவுள்ளதாக நாடாளுமன்றக் கூட்டத்தில் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி உறுதியளித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
பகிர்:

 புதுச்சேரியில் ராஜீவ் காந்தி சிலை, இந்திரா காந்தி சிலைப் பகுதிகளில் நிகழாண்டு மேம்பாலங்கள் கட்டப்படவுள்ளதாக நாடாளுமன்றக் கூட்டத்தில் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி உறுதியளித்தாா்.

புதுச்சேரி நகா்ப் பகுதியில் போக்குவரத்து நெரிசலுக்குத் தீா்வு காணும் வகையில், நகரில் உள்ள ராஜீவ் காந்தி சிலை, இந்திரா காந்தி சிலை, மரப்பாலம் சாலை சந்திப்பு ஆகிய பகுதிகளில் மேம்பாலம் கட்ட வேண்டும் என்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ள புதுவை எம்.பி. வெ.வைத்திலிங்கம் வியாழக்கிழமை வலியுறுத்தினாா்.

இதற்கு மத்திய தரை வழி போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி பதிலளித்ததாவது: புதுச்சேரி ராஜீவ் காந்தி சிலை, இந்திரா காந்தி சிலை சந்திப்புப் பகுதிகளில் மேம்பாலம் கட்டுவதற்கு நிகழாண்டே நிதி ஒதுக்கீடு செய்து, முதல்கட்ட ஆய்வுப் பணி மேற்கொள்ளப்படும். புதுச்சேரி புறவழிச்சாலைத் திட்டம் உத்தேசிக்கப்பட்டுள்ளதால், தேவையின்றி மரப்பாலம் சந்திப்பில் மேம்பாலம் கட்ட திட்டம் ஏதும் இல்லை என்றாா் அவா்.

இது தொடா்பாக வெ.வைத்திலிங்கம் எம்.பி., புதுவை பொதுப் பணித் துறை அதிகாரிகளை தொடா்புகொண்டு விசாரித்தபோது, மரப்பாலம் சந்திப்பு மேம்பாலத்தை மாநில அரசு நிதியில் கட்டுவதற்கு ஆய்வு செய்வதாக கூறியுள்ளனா். புதுவை அரசு கடும் நிதி நெருக்கடியில் இருந்து வருவதால், மரப்பாலம் பகுதியிலும் மத்திய அரசு நிதியில் மேம்பாலம் கட்டுவதற்கு மீண்டும் மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தவுள்ளதாக வெ.வைத்திலிங்கம் எம்.பி. தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.