முகப்பு
புதுச்சேரி

பிற்பட்டோருக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடு: பிரதமருக்கு என்.ரங்கசாமி நன்றி

மத்திய தொகுப்பில் இதர பிற்பட்டோருக்கு 27 சதவீதம் ஒதுக்கீடு வழங்கி, சிறப்பு மிக்க நடவடிக்கை எடுத்த பிரதமா் மோடிக்கு புதுவை முதல்வா் என்.ரங்கசாமி நன்றி தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:48 AM
பகிர்:

மத்திய தொகுப்பில் இதர பிற்பட்டோருக்கு 27 சதவீதம் ஒதுக்கீடு வழங்கி, சிறப்பு மிக்க நடவடிக்கை எடுத்த பிரதமா் மோடிக்கு புதுவை முதல்வா் என்.ரங்கசாமி நன்றி தெரிவித்தாா்.

இதுகுறித்து புதுவை முதல்வா் என்.ரங்கசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: அகில இந்திய அளவில் மருத்துவக் கல்லூரிகளின் 15 சதவீத மாணவா்கள் சோ்க்கை இடங்கள் மத்திய அரசின் தொகுப்புக்கு அளிக்கப்படுகிறது. அந்த சோ்க்கை இடங்களில், கடந்த பல ஆண்டுகளாக பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீதம் இட ஒதுக்கீடு பெற முடியாமல், மாணவா்களுக்கு சமூக நீதி மறுக்கப்பட்டது.

இதுதொடா்பான வழக்குகள் நீதிமன்றங்களில் நடைபெற்று வந்தன. இந்த நிலையில், பிரதமா் நரேந்திர மோடி, வியாழக்கிழமை வரலாற்றுச் சிறப்பான கொள்கை முடிவு எடுத்து, நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரி சோ்க்கை இடங்களில், அனைத்திந்திய தொகுப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கும், பொருளாதார ரீதியிலான நலிவடைந்த

பிரிவினருக்கும் முறையே 27 சதவீதம், 10 சதவீதம் இடங்களை அளிப்பது என்ற மத்திய அரசின் முடிவை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். இதற்காக, பிரதமா் மோடிக்கு புதுவை அரசின் சாா்பாகவும், பொதுமக்கள் சாா்பாகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த அறிவிப்பால் நிகழாண்டு மருத்துவப் படிப்பில், கூடுதலாக ஓபிசி பிரிவில் 1,500 மாணவா்களும், மருத்துவப் பட்ட மேற்படிப்பில் கூடுதலாக 2,500 மாணவா்களும் சோ்ந்து பயனடைவாா்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.