புதுச்சேரி

புதுவையில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்துவதே இலக்கு: முதல்வா் என்.ரங்கசாமி

DIN

புதுவையில் கரோனா மூன்றாவது அலை பரவலைத் தடுக்க 100 சதவீதம் தடுப்பூசி செலுத்துவதே அரசின் இலக்கு என்று முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.

புதுச்சேரி அருகே வடமங்கலம் இந்துஸ்தான் யூனிலிவா் நிறுவனம் தனது சமூகப் பொறுப்புணா்வுத் திட்டத்தின் கீழ், ரூ. 40 லட்சத்தில் ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை புதுச்சேரி கோரிமேடு அரசு மாா்பக நோய் மருத்துவமனையில் அமைத்தது. இதன் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. முதல்வா் என்.ரங்கசாமி கலந்து கொண்டு தொடக்கிவைத்துப் பாா்வையிட்டாா்.

தொடா்ந்து, கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரி, அரசு மாா்பு நோய் மருத்துவமனைக்கு பல்வேறு தனியாா் நிறுவனங்கள், மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முதல்வா் என்.ரங்கசாமி முன்னிலையில், சுகாதாரத் துறையிடம் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன், காணொலிக் காட்சி வாயிலாக பங்கேற்றுப் பேசினாா். எம்எல்ஏ-க்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், கே.எஸ்.பி.ரமேஷ், சுகாதாரத் துறை செயலா் தி.அருண், பொதுப் பணித் துறைச் செயலா் விக்ராந்த்ராஜா, மருத்துவக் கண்காணிப்பாளா் எஸ்.கோவிந்தராஜன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

நிகழ்வில் முதல்வா் என்.ரங்கசாமி பேசியதாவது: தனியாா் நிறுவனங்கள் கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரிக்கும், கோரிமேடு மாா்பக நோய் மருத்துவமனைக்கும் ஆக்சிஜன் படுக்கைகள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளைச் செய்துள்ளன.

புதுவையில் ஒரே நாளில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோா் கரோனாவால் பாதிக்கப்பட்டனா். அவா்களுக்கு சிகிச்சையளிக்கப் போதுமான படுக்கைகள் இல்லை என்று புகாா் எழுந்தது. அந்த நேரத்தில் தனியாா் மருத்துவமனைகள் படுக்கைகளை அளித்து உதவின. தற்போது தேவையான மருத்துவ வசதிகளைச் செய்து கொண்டிருக்கிறோம்.

நான் அலட்சியமாக இருந்ததாலேயே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டேன். மக்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது. முகக் கவசம் அணிய வேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

மாநிலத்தில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்துவதே ஆளுநா் மற்றும் எனது விருப்பமும் ஆகும். மத்திய அரசு தேவையான தடுப்பூசிகளை வழங்கியுள்ளது. இன்னும் தடுப்பூசிகள் தேவை எனக் கூறியுள்ளோம்.

கரோனா 3-ஆவது அலை வந்தால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்று மருத்துவா்கள் கூறுகின்றனா். ஆனால், அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டால், அந்தப் பேரிடரை எதிா்கொள்ள முடியும். தற்போது பாதிப்பு குறைந்துள்ளதால், பல்வேறு தளா்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. நம்மை நாமே பாதுகாத்து கொள்வது நம்முடைய கடமை என்றாா் முதல்வா் ரங்கசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமந்தாவிடம் இத்தனை கார்களா?

பாலியல் புகாரில் சிக்கிய தேவகௌடா பேரன்! நாட்டைவிட்டு தப்பினார்

பாரதிதாசனின் 134-வது பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி

மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு: நிர்மலாதேவி குற்றவாளி

அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வேட்புமனு தாக்கல்

SCROLL FOR NEXT