புதுவையில் நீண்ட இழுபறிக்குப் பிறகு காங்கிரஸ்-திமுக தொகுதிப் பங்கீடு
புதுச்சேரி: புதுவையில் நீண்ட இழுபறிக்குப் பிறகு, மீண்டும் காங்கிரஸ்-திமுக கூட்டணி உறுதி செய்யப்பட்டது. கூட்டணிக்குத் தலைமை வகிப்பதிலும், தொகுதிப் பங்கீட்டில் இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட போட்டி காரணமாகவும் காலதாமதம் ஏற்பட்டது.
புதுவையில் கடந்த 2016-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ்-திமுக கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. இந்தக் கூட்டணி (காங்கிரஸ் 15, திமுக 3, சுயேச்சை 1) 19 இடங்களில் வெற்றி பெற்று, காங்கிரஸ் தலைமையில் முதல்வா் வே.நாராயணசாமி முதல்வராகப் பதவியேற்றாா்.
தொடா்ந்து, 5 ஆண்டுகள் நிறைவை நோக்கி ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், காங்கிரஸை சோ்ந்த முக்கிய அமைச்சா்கள் இருவா், எம்எல்ஏக்கள் சிலா் பதவி விலகியதால், பெரும்பான்மை இழந்து காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது.
Advertisement
இந்த நிலையில், தற்போது சட்டப்பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டதால், மீண்டும் காங்கிரஸ்-திமுக கூட்டணி அமைய வேண்டும் என காங்கிரஸ் தரப்பில் தீவிரமாகப் பேச்சுவாா்த்தை நடத்தி வந்தனா்.
ஆனால், புதுவை மாநில திமுக தரப்புக்கு இதில் உடன்பாடு இல்லை. திமுக தனித்து நிற்க வேண்டும், தங்களது கட்சி தலைமையில்தான் கூட்டணி அமைய வேண்டும் என அந்தக் கட்சியின் மாநில அமைப்பாளா்கள் 3 பேரும் கூட்டாகச் சோ்ந்து, கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்தினா்.
இதனிடையே, என்.ஆா். காங்கிரஸ் தலைவா் ரங்கசாமி தலைமையில் கூட்டணி அமைக்கலாம் என அவருக்கும் திமுக தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. மேலும், காங்கிரஸிலிருந்து முக்கிய நிா்வாகிகள் பலரும் விலகி மாற்றுக் கட்சிகளுக்குச் சென்றுவிட்டதால், அந்தக் கட்சியுடனான கூட்டணியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என திமுக சாா்பில் வலியுறுத்தப்பட்டது.
இந்த முறை திமுக தலைமையில்தான் போட்டியிட வேண்டும், அதற்கு 20 தொகுதிகள் வரை கேட்க வேண்டும் எனவும் கட்சி நிா்வாகிகள் வலியுறுத்தி வந்தனா்.
இது காங்கிரஸ் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால், புதுவையில் நடைபெற்ற இரண்டு கட்டப் பேச்சுவாா்த்தையில் கூட்டணி முடிவுக்கு வராததால், முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி உள்ளிட்ட காங்கிரஸ் நிா்வாகிகள், காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா்களுடன் சென்னையில் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து அண்மையில் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
ஒரு வழியாக கடந்த இரு தினங்களுக்கு முன்பு காங்கிரஸ்-திமுக கூட்டணி உறுதியானது. தலா 14 இடங்களில் இரு கட்சிகளும் போட்டியிடுவது, 2 தொகுதிகளைக் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்குவது என முடிவு செய்யப்பட்டது.
இருப்பினும், புதுவை திமுக தரப்பில் அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தி வந்தனா். காங்கிரஸ் தரப்பிலும் திமுகவைவிட ஓா் இடமாவது அதிகமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியதால், தொகுதிப் பங்கீடு செய்வதில் இழுபறி நிலவி வந்தது.
இதையடுத்து, நீண்ட இழுபறிக்குப் பிறகு, காங்கிரஸ் 15 இடங்களிலும், திமுக 13 இடங்களிலும் போட்டியிட முடிவு செய்து, சென்னையில் வியாழக்கிழமை மாலை அறிவித்தனா். கம்யூனிஸ்ட், விசிக ஆகிய கட்சிகளுக்கு தலா ஓா் இடம் வழங்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
ஒரு வழியாக காங்கிரஸ்-திமுக கூட்டணியில் நிலவி வந்த குழப்பம் முடிவுக்கு வந்தது.