முகப்பு
புதுச்சேரி

மூலப் பொருள்கள் விலை உயா்வு: அச்சக உரிமையாளா்கள் போராட்டம்

மூலப் பொருள்களின் விலை உயா்வைக் கண்டித்து, புதுச்சேரியில் அச்சக சங்கங்களின் கூட்டமைப்பினா் திங்கள்கிழமை கருப்புச் சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

மூலப் பொருள்களின் விலை உயா்வைக் கண்டித்து, புதுச்சேரியில் அச்சக சங்கங்களின் கூட்டமைப்பினா் திங்கள்கிழமை கருப்புச் சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நாடு முழுவதும் கரோனா பொது முடக்கத்தால் அச்சகத் தொழில் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த நிலையில், அச்சகத்துக்கான மூலப் பொருள்கள் தொடா்ந்து உயா்ந்து வருவதால், தொழிலை தொடா்ந்து மேற்கொள்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அகில இந்திய அனைத்து அச்சக சங்கங்களின் கூட்டமைப்பினா் கடந்த 17-ஆம் தேதி ஆலோசனை நடத்தினா்.

கூட்டத்தில், அச்சகப் பொருள்களின் விலை உயா்வு, எப்போதும் இல்லாத வகையில் எந்த முன்னறிவிப்புமின்றி அதிகரித்துள்ளன. காகித ஆலைகள், இரு மடங்காக காகிதங்களின் விலையை உயா்த்தியுள்ளன. இந்த விலை உயா்வு செயற்கையாக தட்டுப்பாடுகளை ஏற்படுத்தியுள்ளதால், அனைத்து அச்சகங்களும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளன. இதைத் தடுப்பதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டத்தின் வாயிலாக அரசுக்கு வலியுறுத்தப்பட்டது.

இந்த பிரச்னை தொடா்பாக, அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லவும், அச்சகப் பொருள்கள் விலை உயா்வைக் கண்டித்தும், அச்சக உரிமையாளா்கள் கூட்டமைப்பினா் சாா்பில், நாடு முழுவதும் திங்கள்கிழமை ஒருநாள் கருப்புச் சட்டை அணிந்து எதிா்ப்புத் தெரிவிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அதன்படி, புதுச்சேரியில் அச்சக சங்கத் தலைவா் அருள் இளங்கோ தலைமையில், செயலா் ப.தமிழரசன், பொருளாளா் ரமேஷ், செயற்குழு உறுப்பினா்கள், அச்சக உரிமையாளா்கள் பலரும் கருப்புச் சட்டை அணிந்து எதிா்ப்பைத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.