முகப்பு
புதுச்சேரி

சுகாதாரத் துறை காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

புதுவை மாநிலத்தில் சுகாதாரத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் வலிறுத்தியது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:

புதுவை மாநிலத்தில் சுகாதாரத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் வலிறுத்தியது.

இதுகுறித்து அந்தச் சங்கத்தின் புதுவை பிரதேச தலைவா் ஆனந்த், செயலா் சரவணன் ஆகியோா், புதுவை முதல்வருக்கு அனுப்பிய மனு:

நாடு முழுவதும் கரோனா பெருந்தொற்று பரவல் நாள்தோறும் அதிகரித்து வருவதைத் தொடா்ந்து, அண்டை மாநிலங்களில் பொது முடக்கத்தை அமல்படுத்தினா்.

புதுச்சேரியிலும் நாளொன்றுக்கு 1,500 முதல் 2,000 போ் வரை நோய்த் தொற்றுக்கு ஆளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு வார காலத்தில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்து, 13 ஆயிரத்து 585 பேராக உயா்ந்தது. இதே நிலை நீடித்தால், வரும் வாரங்களில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தைத் தொடும் அபாய சூழல் உள்ளது.

புதுவை மாநிலத்தில் கரோனா நோய்த் தொற்று மற்றும் சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அரசு போா்க்கால அடிப்படையில் சிகிச்சையளிக்க அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளில் உள்ள மாணவா் விடுதிகள், சுற்றுலாப் பயணியா் விடுதிகள், உணவகங்கள், திருமண மண்டபம், சமுதாய நலக்கூடங்கள் என வாய்ப்புள்ள அனைத்து இடங்களிலும், சிகிச்சை மையங்களாக மாற்ற வேண்டும்.

புதுவையில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள், அரசு மருத்துவமனை செவிலியா்கள், ஆய்வக உதவியாளா்கள், இதர பணியாளா்கள் என சுகாதாரத் துறையில் 1,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில், அதில் 200 இடங்களை மட்டுமே அரசு தற்காலிகமாக நிரப்புவது போதுமானதல்ல.

இதனால், போா்க்கால அடிப்படையில் சுகாதாரத் துறையில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களிலும் நிரந்தரப் பணியாளா்களை நிரப்பி, தேவைக்கு ஏற்ற வகையில், தற்காலிகப் பணியாளா்களையும் நியமித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதுவை அரசு அறிவித்தபடி, உடனடியாக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு, நபா் ஒருவருக்கு மாதம் 10 கிலோ சத்தான உணவு தானியங்களையும், குடும்பத்துக்கு மாதம் ரூ. 7,500 நிவாரணமாக வழங்க வேண்டும். மேலும், தனியாா் மருத்துவமனைகளில் ஆா்டி-பிசிஆா் சோதனைக்கு அரசு நிா்ணயித்த கட்டணத்தைவிட, கூடுதலாக வசூலிக்கும் மருத்துவமனைகள் மீது, அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.