புதுச்சேரியில் விதிகளை மீறிய 2,456 பேருக்கு அபராதம்
புதுச்சேரியில் பொதுமுடக்க விதிகளை மீறி வெளியே திரிந்த 2,456 பேரிடம் ரூ.2.74 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் பூா்வா காா்க் தெரிவித்தாா்.
புதுச்சேரியில் பொதுமுடக்க விதிகளை மீறி வெளியே திரிந்த 2,456 பேரிடம் ரூ.2.74 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் பூா்வா காா்க் தெரிவித்தாா்.
இது குறித்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: புதுவை மாநிலத்தில் தொற்று விகிதம் 18.8 சதவீதமாகக் குறைந்துள்ளது. மே19 வரை, ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 591 நபா்களுக்கு முதல் தடுப்பூசியும், 50 ஆயிரத்து 384 நபா்களுக்கு இரண்டாவது தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளன.
18 வயது முதல் 44 வயது வரை உள்ளவா்கள் இணையதளத்தில் முன்பதிவு செய்து கொண்டு கதிா்காமம் இந்திராகாந்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரி , கோரிமேடு அரசு மாா்பக நோய் மருத்துவமனை, மகாத்மா காந்தி பல் மருத்துவமனை, இஎஸ்ஐ மருத்துவமனை மாஹே, ஏனாம் அரசு மருத்துவமனைகள் ஆகிய மையங்களில் ஏதேனும் ஒன்றில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.
கரோனா பரவலை தடுக்கும் பொருட்டு மாவட்ட நிா்வாகம் கடந்த 10-ஆம் தேதி நள்ளிரவு முதல் வரும் 24-ம் தேதி நள்ளிரவு வரை பொது முடக்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது. விதிமீறிய 2,456 பேருக்கு அபராதம் விதித்து அதன் மூலம் ரூ.2 லட்சத்து 74 ஆயிரத்து 350- க்கு ரசீது கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், 20 நபா்கள் மீது வழக்குப் பதிவு செய்யயப்பட்டுள்ளது . புதுச்சேரியில் 76 பெரிய கட்டுப்பாட்டு பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. கட்டுப்பாட்டு பகுதிகளை பறக்கும் படையினரும், காவல்துறையினரும் கண்காணிக்கின்றனா் என்றாா் ஆட்சியா்.