முகப்பு
புதுச்சேரி

கருப்பு பூஞ்சை நோய்க்கு தெலங்கானாவிலிருந்து மருந்து புதுவை துணைநிலை ஆளுநா் நடவடிக்கை

கருப்பு பூஞ்சை : சிகிச்சை அளிப்பதற்கான மருந்துகளை தெலங்கானாவிலிருந்து வரவழைத்து துணை நிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் விரைந்து நடவடிக்கை

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:16 PM
பகிர்:

கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை அளிப்பதற்கான மருந்துகளை தெலங்கானாவிலிருந்து வரவழைத்து துணை நிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டாா்.

புதுவை மாநிலத்தில் கரோனா தொற்று பரவலைத் தொடா்ந்து, கருப்பு பூஞ்சை நோய் தாக்குதல் மூலம் 20-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதற்கான சிகிச்சை, மருந்துகளை அரசு வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை எழுந்தது.

இது தொடா்பாக விசாரித்த ஆளுநா், இந்த நோய்த் தாக்கத்துக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், அதற்கான மருந்துகளைப் பெறவும் உடனடி நடவடிக்கை மேற்கொண்டாா். இது குறித்து, ஆளுநா் அலுவலகம் வெள்ளிக்கிழமை இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

புதுவை மாநிலத்தில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு ஜிப்மா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிக்கு, அவசர சிகிச்சை அளிக்க மருந்துகள் வேண்டுமென்று காரைக்கால் மாவட்ட ஆட்சியா், ஆளுநரிடம் வேண்டுகோள் விடுத்தாா். இதையேற்று உடனடியாக கருப்பு பூஞ்சை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் 10 ஆமபொனைக்ஸ் மருந்துகள் தெலங்கானாவிலிருந்து புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

உடனடியாக மருத்துவ உதவிகள் அளித்த தெலங்கானா முதலமைச்சா் சந்திரசேகரராவ், ஆளுநா் அலுவலக அதிகாரிகளுக்கு, துணை நிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் நன்றி தெரிவித்தாா் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.