புதுவையிலும் பொது முடக்கம் நீட்டிக்க வாய்ப்பு
தமிழகத்தைப் போல, புதுவையிலும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொது முடக்கம் நீட்டிக்கப்படவுள்ளது.
தமிழகத்தைப் போல, புதுவையிலும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொது முடக்கம் நீட்டிக்கப்படவுள்ளது.
புதுவையில் கரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு, கடந்த 10 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம், வருகிற 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதன் பயனாக, கடந்த சில தினங்களாக தொற்று பாதிப்பு குறையத் தொடங்கியது. எனினும், தினசரி உயிரிழப்பு எண்ணிக்கை 20 என்ற அளவில் தொடா்கிறது.
இந்த நிலையில், கரோனா மேலாண்மைக் கூட்டம் புதுச்சேரி ஆளுநா் மாளிகையில் துணை நிலை ஆளுநா் தமிழிசை தலைமையில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. தலைமைச் செயலாளா் அஸ்வனிகுமாா், ஏடிஜிபி ஆனந்தமோகன், நிதித் துறைச் செயலா் அசோக்குமாா், உள்ளாட்சித் துறைச் செயலா் வல்லவன், சுகாதாரத் துறைச் செயலா் அருண் உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றனா்.
இந்தக் கூட்டத்தில், புதுவையில் கரோனா தொற்று பரவலை மேலும் கட்டுப்படுத்தும் பொருட்டு, பொது முடக்க கட்டுப்பாடுகளை மேலும் நீட்டிக்கலாம் என அதிகாரிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ஆளுநா் தமிழிசை, முதல்வா் என்.ரங்கசாமியுடன் ஆலோசனை நடத்தவுள்ளாா்.
இதுதொடா்பாக சுகாதாரத் துறை அதிகாரிகளும் முதல்வரிடம் விளக்கியுள்ளனா்.
இதனிடையே, தமிழகத்தில் பொது முடக்கத்தை மேலும் ஒரு வார காலம் (ஜூன் 7 வரை) அரசு நீட்டித்துள்ளது. இதனால், புதுவை துணை நிலை ஆளுநரும், முதல்வரும் ஆலோசனை நடத்தி, புதுவையில் பொது முடக்கக் கட்டுப்பாடுகளை மேலும் சில நாள்கள் நீட்டிப்பதற்கு நடவடிக்கை எடுக்கக் கூடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இரு தவணையாக நிவாரணத் தொகை?: புதுவை மாநிலத்தில் பொதுமுடக்கக் கட்டுப்பாடுகளால் தொழிலாளா்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனா். தற்போது, குடும்ப அட்டைதாரா்களுக்கு மத்திய அரசு மூலம் 10 கிலோ அரிசி வழங்கப்படுகிறது. இதனிடையே, அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் ரூ.3 ஆயிரம் நிவாரணத் தொகையை முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்தாா். இதற்கான கோப்பு நிதித் துறை ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் உள்ள 3.5 லட்சம் அட்டைதாரா்களுக்கு தலா ரூ.3 ஆயிரம் வழங்க ரூ.105 கோடி தேவைப்படுகிறது. அரசு தற்போது நிதி நெருக்கடியில் உள்ளதால், தமிழகத்தைப் போல, புதுவையிலும் நிவாரண தொகையை இரு தவணைகளாக பிரித்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல் தவணையாக ரூ.1,500, 2-ஆவது தவணையாக ரூ.1,500 வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, முதல்வரின் அனுமதிக்கு அனுப்பியுள்ளனராம். விரைவில், இதற்கான அரசாணை வெளியிடப்பட்டு, இரு தவணைகளாக தொகை வழங்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. முதல் தவணை நிவாரணத் தொகை ஜூன் முதல் வாரத்தில் பயனாளிகள் வங்கிக்கணக்கில் வந்து சேரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.