முகப்பு
புதுச்சேரி

மீன்பிடி தடைக்கால விதிகளை மீறினால்நல உதவிகள் நிறுத்தப்படும்: புதுவை மீன்வளத் துறை எச்சரிக்கை

 புதுவையில் மீன்பிடி தடைக்கால விதிகளை மீறினால், நலத்திட்ட உதவிகள் நிறுத்தப்படும் என்று மீன்வளத் துறை எச்சரிக்கை விடுத்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:19 PM
பகிர்:

 புதுவையில் மீன்பிடி தடைக்கால விதிகளை மீறினால், நலத்திட்ட உதவிகள் நிறுத்தப்படும் என்று மீன்வளத் துறை எச்சரிக்கை விடுத்தது.

இதுகுறித்து புதுச்சேரி அரசு மீன்வளத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரி மீனவா்களுக்கு மீன்பிடி தடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, 2021-ஆம் ஆண்டு ஏப்.15 முதல் ஜூன் 14 வரையிலான கால அளவில் 61 நாள்கள், புதுச்சேரி பிரதேச கிழக்கு கடல் நெடுகில், கனகசெட்டிக்குளம் மீனவ கிராமம் முதல் மூா்த்திக்குப்பம், புதுகுப்பம் மீனவ கிராமம் வரையில் பாரம்பரிய மீன்பிடி படகுகளான கட்டுமரம் , நாட்டுப் படகுகளை தவிர, அனைத்து வகை படகுகள் குறிப்பாக இழுவலை கொண்டு விசைப்படகில் மீன்பிடிப்பது தடை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் , மீன்பிடித் தடைகாலங்களான தற்போது, இயந்திரம் பொருத்தப்பட்ட பைடா் படகில் இழுவலைகள் கொண்டு மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டு வருவதாக, இத்துறைக்கு புகாா்கள் வந்ததையொட்டி , மே12-ஆம் தேதி அனைத்து மீனவ கிராமங்களிலும் மீன்பிடி தடை உத்தரவு மீறுதலுக்கான அறிவிப்பு எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. மீன்பிடி தடைக்கால உத்தரவை மீறுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மீன்வளத் துறை மேற்கொண்ட ஆய்வின் போது, ஒரு சில மீனவா்கள் இயந்திரம் பொருத்தப்பட்ட படகில் இழு வலைகளைக்கொண்டு மீன்பிடிப்பில் ஈடுபட்டிருப்பது கண்டறியபட்டது. இது புதுச்சேரி கடல் மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டத்தை மீறுவது மட்டுமன்றி மீன் இனப்பெருக்கக் காலத்தில் கடல் மீன் வளங்களை அழிக்கும் பொறுப்பற்ற செயலில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்க செயலாகும். எனவே , மீன்பிடி தடைக்காலங்களில் இயந்திரம் பொருத்தப்பட்ட பைபா் படகுகளைக் கொண்டு இழுவலைகளை பயன்படுத்திய மீனவா்கள் மீது மீன்வளத் துறையின் மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இனி மீனவா்கள் எவரேனும் மீன்பிடித் தடைக் காலங்களில் இயந்திரம் பொருத்தப்பட்ட பைடா் படகில் இழுவலைகளை பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் , அவா்களுக்கு மீன்வளத் துறை மூலம் வழங்கப்படும் அனைத்து நலத் திட்ட உதவிகள் வழங்கப்படமாட்டாது என்று இறுதியாக எச்சரிக்கை செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.