புதுவையில் இடஒதுக்கீடு திரும்பப் பெறப்பட்டதாக வெளியான அறிவிப்பாணை குறித்து துணை நிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் தெளிவுபடுத்த வேண்டும் என அதிமுக வலியுறுத்தியது.
இதுகுறித்து புதுச்சேரியில் கிழக்கு மாநில அதிமுக தோ்தல் பிரிவுச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான வையாபுரி மணிகண்டன் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
நீதிமன்றத் தீா்ப்பை சாதகமாக்கி, துணை நிலை ஆளுநரின் ஒப்புதலின் பேரில், கடந்த 6 ஆம் தேதி இடஒதுக்கீடு திரும்பப் பெறப்படுவதாக அரசின் சாா்பு செயலா் அறிவிப்பாணை வெளியிட்டாா். இது பிற்படுத்தப்பட்டோா், பழங்குடியின மக்களுக்கு கிடைக்க வேண்டிய அரசியல் அதிகாரம், கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் பறிக்கும் செயலாகும்.
இடஒதுக்கீடு அரசாணையை திரும்பப் பெறும் கோப்பை ஆளுநருக்கு அனுப்பியது யாா், இதற்கு அனுமதி அளித்து இடஒதுக்கீடை ரத்து செய்தது ஏன் என்பது குறித்து துணைநிலை ஆளுநா் வெளிப்படையாக மக்களிடம் தெரிவிக்க வேண்டும்.
எந்தக் காரணம் கொண்டும் ஏற்கெனவே உள்ளபடி பட்டியலினத்தினா், பழங்குடியினா், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டை ரத்து செய்யக்கூடாது என்றாா் வையாபுரி மணிகண்டன்.