புதுவை மாநில உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கியது.
புதுவை மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் மூன்று கட்டமாக நடைபெறுகிறது. இதில் முதல் கட்ட தேர்தல் புதுச்சேரி நகராட்சி மற்றும் உழவர்கரை நகராட்சிகளுக்கு நவம்பர் 2ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, முதல் கட்ட தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் திங்கள்கிழமை 11 மணிக்கு தொடங்கியது.
உள்ளாட்சித் தேர்தலுக்கு நேரடியாகவோ, இணையதளம் மூலமாகவோ வேட்புமனு தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி புதுச்சேரி நகராட்சிகான வேட்புமனுத்தாக்கல் புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி மையத்தில் தொடங்கியுள்ளது.
இதில் நகராட்சித் தலைவர் மற்றும் 33 வார்டு உறுப்பினர்கள் போட்டியிடுவதற்கு தேர்தல் நடத்தும் அலுவலர் ரெட்டி தலைமையில், 9 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தனித்தனியாக வேட்பு மனுக்களை பெறுகின்றனர். முதல்நாளில் சுயேச்சையாக போட்டியிடும் பலர் வேட்புமனுகான படிவங்களை பெற்று செல்கின்றனர்.
இதேபோல் புதுவை உழவர்கரை நகராட்சிக்கான தலைவர் மற்றும் 42 உறுப்பினர்கள் பதவிகளுக்கு புதுச்சேரி லாஸ்பேட்டை காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்தில் வேட்புமனுக்கள் பெறுவது தொடங்கியுள்ளது.