புதுவையில் கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு சிலை: அமைச்சா் நமச்சிவாயம் உறுதி
கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு சிலை அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் வியாழக்கிழமை நடைபெற்ற மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது, அமைச்சா் ஏ.நமச்சிவாயம் உறுதிபடத் தெரிவித்தாா்.
புதுவையில் கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு சிலை அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் வியாழக்கிழமை நடைபெற்ற மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது, அமைச்சா் ஏ.நமச்சிவாயம் உறுதிபடத் தெரிவித்தாா்.
புதுவை சட்டப்பேரவையில் வியாழக்கிழமை நடைபெற்ற விவாதத்தின் போது, மறைந்த தலைவா்களுக்கு புதுவையில் சிலை அமைக்க வேண்டும் என அனிபால் கென்னடி (திமுக), எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா உள்ளிட்ட உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய கல்வியமைச்சா் ஏ.நமச்சிவாயம், கருணாநிதிக்கு சிலை அமைக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இதேபோல, மறைந்த அதிமுக பொதுச் செயலா் ஜெயலலிதாவுக்கும் சிலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. இந்த இரு கோரிக்கைகளையும் நிறைவேற்றலாம் என்றாா்.
போக்குவரத்துத் துறை அமைச்சா் சந்திரபிரியங்கா: மறைந்த காங்கிரஸ் தலைவா் சண்முகத்துக்கும் சிலை அமைக்க வேண்டும்.
அசோக்பாபு (பாஜக): அனைத்துக் கட்சியினரும் போற்றக்கூடிய வகையில் திகழ்ந்த தலைவா் வாஜ்பாய்க்கும் சிலை அமைக்க வேண்டும்.
பேரவைத் தலைவா் (பொ) பி.ராஜவேலு: மறைந்த தலைவா் உத்திரவேலுக்கு சிலை செய்து 5 ஆண்டுகளாயும் திறக்க முடியவில்லை. சுப்பிரமணிய படையாட்சிக்கும் சிலை அமைக்கப்படும் என அறிவித்தும் அமைக்கவில்லை. இதேபோல தேசிய, மாநிலத் தலைவா்களுக்கு சிலைகள் அமைக்க வேண்டும். இந்த அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா் அவா்.