தில்லி விமான நிலைய ஓடுபாதையை முடக்கிய கழுகு! தரையிறங்க முடியாமல் தவித்த விமானங்கள்!
தில்லி விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறித்து...
தில்லி பன்னாட்டு விமான நிலையத்தின் ஓடுபாதையில் நின்ற கழுகினால் 2 விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லி இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையத்தில், புதன்கிழமை (மார்ச் 25) காலை 11.45 மணியளவில் பாட்னாவிலிருந்து சென்ற ஏர் இந்தியா விமானம் மற்றும் மதுரையிலிருந்து சென்ற இண்டிகோ விமானம் தரையிறங்கத் திட்டமிடப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, விமான நிலையத்தின் மீது பறந்த கழுகு ஒன்று விமான ஓடுபாதையில் வந்து நின்றது. இதனால், தரையிறங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால், விமானங்கள் தொடர்ந்து வட்டமடித்து பறந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து அந்த கழுகு அங்கிருந்து சென்ற பிறகு இரு விமானங்களும் தரையிறக்கப்பட்டு, பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இருப்பினும், அந்த கழுகு அங்கிருந்து எவ்வாறு அப்புறப்படுத்தப்பட்டது எனும் தகவல் தெரிவிக்கப்படவில்லை.
முன்னதாக, தில்லி விமான நிலையத்தில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் விமானங்கள் மீது பறவை மோதிய 695 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.