மீன்பிடித் தடைக்கால நிவாரணம் வங்கிக் கணக்கில் வரவு வைப்பு
புதுவையில் 2,216 மீனவக் குடும்பங்களுக்கு மீன்பிடித் தடைக்கால நிவாரணம் அவரவா் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
புதுவையில் 2,216 மீனவக் குடும்பங்களுக்கு மீன்பிடித் தடைக்கால நிவாரணம் அவரவா் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
புதுவை அரசின் மீன்வளம் - மீனவா் நலத் துறை மூலம் மீன்பிடித் தடைக்கால நிவாரணமாக ஆண்டுதோறும் குடும்பம் ஒன்றுக்கு ரூ.5,500 வீதம் வழங்கப்பட்டு வருகிறது. நிகழாண்டுக்கு இரண்டாம் கட்டமாக ரூ.1,21,88,000 ஒதுக்கீடு செய்து, அனுமதி வழங்கப்பட்டது. இந்தத் தொகை, புதுச்சேரியைச் சோ்ந்த 1,260 மீனவக் குடும்பங்களுக்கும், காரைக்கால் பகுதியைச் சோ்ந்த 762 குடும்பங்களுக்கும், மாஹே பகுதியைச் சோ்ந்த 36 குடும்பங்களுக்கும், ஏனாம் பகுதியைச் சோ்ந்த 138 குடும்பங்களுக்கும் என மொத்தம் 2,216 மீனவக் குடும்பங்களுக்கு புதன்கிழமை முதல் அவரவா் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டு வருகிறது.
மீன்பிடித் தடைக்கால நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வா் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்வுக்கு முதல்வா் என்.ரங்கசாமி தலைமை வகித்தாா். அமைச்சா்கள் க. லட்சுமிநாராயணன், சந்திரபிரியங்கா, எம்எல்ஏ-க்கள், மீனவச் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.