முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் ஏப்ரல் 13 முதல் 16-ம் தேதி வரை கடற்கரை திருவிழா

புதுவையில் புதிய சுற்றுலா விழா ஏற்பாடுகள் குறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் க.லட்சுமி நாராயணன் செவ்வாய்க்கிழமை செய்தியாளரிடம் கூறியதாவது:

Updated On : 5 ஏப்ரல், 2022 at 1:19 PM
பகிர்:

புதுச்சேரி: புதுவையில் புதிய சுற்றுலா விழா ஏற்பாடுகள் குறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் க.லட்சுமி நாராயணன் செவ்வாய்க்கிழமை செய்தியாளரிடம் கூறியதாவது:

புதுச்சேரி, நம் நாட்டிலேயே சிறந்த சுற்றுலா நகரமாக மாறியுள்ளது. கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகப் பகுதிகளிலிருந்து வார இறுதி நாள்களில் சுற்றுலாப் பயணிகள்
குவிந்து வருகின்றனர். இதனை, வார வேலை நாள்களுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டியுள்ளது.

புதுவையில் பல்வேறு சுற்றுலா உள்கட்டமைப்பு வசதிகள் கடந்த வருடங்களில் சுற்றுலாத்துறையால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, வம்பாகீரப்பாளையம், பாண்டி மெரினா கடற்கரை, புதுக்குப்பம் மணற்குன்று கடற்கரை, வீராம்பட்டினம் ரூபி கடற்கரை மற்றும் சின்ன வீராம்பட்டினம் ஈடன் கடற்கரை என கடற்கரைகள் மேம்படுத்தப்பட்டு சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரியில் செலவிடும் நாள்களை அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

கரோனா பெருந்தொற்றால் நமது மாநிலத்திற்கு கிடைக்க வேண்டிய சுற்றுலா வருவாய் குறைந்தபோதிலும், நமது அரசின் தீவிர முயற்சியால் அதனை
மீட்டெடுத்துள்ளோம். இதன் படி சுற்றுலாத்துறை மூலம் வருகின்ற ஏப்ரல் 13 முதல் 16 வரை கடற்கரை திருவிழா நடத்த திட்டமிட்டுள்ளது. 

காந்தி சிலை கடற்கரை, பாண்டி மெரினா கடற்கரை, சுண்ணாம்பாறு பேரடைஸ் கடற்கரை, காந்தி திடல் கைவினை அரங்கம் போன்ற இடங்களில் கலைநிகழ்ச்சிகளும்,
கடல்சார் விளையாட்டுகளும், கடல் உணவு விற்பனையும், மேலைநாட்டு இசை நிகழச்சிகளும், கருத்தரங்குகளும், கட்டுமரப்படகு போட்டிகளும், மிதிவண்டி மாரத்தான் போட்டிகளும், கைப்பந்து, போட்டிகளும், பட்டம் விடும் நிகழ்ச்சிகளும் அதிகாலை மீன் உணவு தேடல் நிகழ்ச்சிகள் என பல நிகழ்ச்சிகளை சுற்றுலாவினரைக் கவரும் வகையில் நடத்தப்பட உள்ளன. 

இந்த விழாவை ஏப்.13-ம் தேதி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் தொடங்கி வைக்க உள்ளனர். இந்த திருவிழா, இந்த நிதியாண்டின் தொடக்க விழா மட்டுமின்றி, நமது மாநிலத்தின் சுற்றுலா வருவாயை பெருக்கும் உத்தியாக இருக்கும் என  அமைச்சர் லக்ஷ்மி நாராயணன் தெரிவித்தார். பேட்டியின்போது சுற்றுலாத்துறை செயலர் நெடுஞ்செழியன், இயக்குனர் பிரியதர்ஷினி ஆகியோர் உடனிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.