சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்
அ.தி.மு.க. என்ற கட்சியுடன் சேர்த்து, மனசாட்சியையும் பா.ஜ.க.விடம் எடப்பாடி பழனிசாமி அடகு வைத்துவிட்டதாக மு.க. ஸ்டாலின் விமர்சனம்...
சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ்நாட்டிற்கும் இந்தியாவுக்கும் முக்கியம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதனை சாத்தியப்படுத்தியது திமுக என்றும், இஸ்லாமியர்களின் உரிமைகளுக்காக முதல் ஆளாக குரல் கொடுப்பது தி.மு.க.தான் என்பதை இஸ்லாமியர்களுக்கு இன்னல் ஏற்படும்போது ஓடி ஒளிந்து கொள்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை அமைந்தகரையில் பேரன்பின் ஈகைப் பெருவிழா – புனித ரமலான் நோன்பு திறப்பு நிகழ்வில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:
''புனித ரமலான் மாதத்தில், கழகச் சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு நடத்தும், இந்த பேரன்பின் ஈகைப் பெருவிழாவில் கலந்து கொண்டு உங்களை எல்லாம் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். ஈகைப் பண்பும், அடுத்தவர்களுக்கு உதவும் மனமும், அனைவரையும் சமமாக கருதி அன்பு செலுத்தும் சமநெறியும் கொண்ட - தூய இஸ்லாமிய சொந்தங்கள் இங்கே கூடியிருக்கிறீர்கள். உங்கள் அனைவருக்கும் என்னுடைய ரமலான் நல்வாழ்த்துகளை முதலில் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் - இஸ்லாமியர்களுக்கும் இருக்கும் உறவு இன்று நேற்று ஏற்பட்டதல்ல. இந்த இயக்கம் தொடங்கியது முதல் உண்டான உறவு.
திராவிட மாடல் ஆட்சியில், சிறுபான்மையினருக்காகச் செயல்படுத்தப்படும் திட்டங்களின் பட்டியல், மிக மிகப் பெரியது. எதைச் சொல்வது எதை விடுவது என்றே தெரியாத அளவுக்கு, அந்த சாதனைப் பட்டியல் மிக மிக நீளமானது.
நம்முடைய திராவிட மாடல் அரசின் மிகப்பெரிய பலமே பெண்கள்தான்! மகளிர் நலனை முன்வைத்துதான் ஏராளமான நலத்திட்டங்களை நாம் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
இஸ்லாமிய மக்களுக்கான அனைத்து அமைப்புகளும் ஒன்றாக - ஒற்றுமையாக கூடி, பேரன்பின் ஈகைப் பெருவிழாவைக் கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம். அனைத்துச் சிறுபான்மை இயக்கங்களும் ஒரே மேடையில் சேர்ந்திருக்கிறார்கள்.
இதற்கு முன்பு, இதுபோன்று இருந்ததா என்றால், இல்லவே இல்லை. இந்த ஒருங்கிணைப்பை ஏற்படுத்தியது திமுக. இந்த ஒற்றுமைதான், தமிழ்நாட்டுக்கும் அவசியம்! ஏன், இந்திய நாட்டுக்கும் அவசியம்!
அப்படியே இதற்கு நேர்மாறான நிலைமை, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் இருந்து வருகிறது! அண்மையில், அசாம் மாநில முதலமைச்சரே இஸ்லாமியர்கள் பற்றி எப்படியெல்லாம் வெறுப்பை விதைத்தார் என்று விளக்கமாகச் சொல்லி, இந்த மேடையின் மாண்பை நான் குறைக்க விரும்பவில்லை. முஸ்லிம்கள் மட்டுமல்ல, கிறிஸ்தவர்கள்கூட நிம்மதியாக கிறிஸ்துமஸ் கொண்டாட முடியவில்லை. குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் என்றுகூட பார்க்காமல் தாக்குதலை நடத்துகிறார்கள்
இப்படி நாடு முழுவதும் நடக்கும் சிறுபான்மையின மக்களுக்கு எதிரான வன்முறை பற்றி, இன்றைக்கு இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்கள் எதாவது கருத்து சொன்னாரா? அ.தி.மு.க. என்ற கட்சியுடன் சேர்த்து, மனசாட்சியையும் பா.ஜ.க.விடம் அடகு வைத்துவிட்டார்.
இஸ்லாமியர்களுக்கு இன்னல் ஏற்படும்போது ஓடி ஒளிந்து கொள்பவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்! எதிர்க்கட்சியாக இருந்தபோதும் சரி, இப்போது ஆட்சியில் இருக்கும்போதும் சரி, இஸ்லாமியர்களின் உரிமைகளுக்காக முதல் ஆளாக குரல் கொடுப்பது தி.மு.க.தான்'' என முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.