புதுச்சேரி கடற்கரைத் திருவிழாவையொட்டி, பீச் வாலிபால் போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
தமிழ்ப் புத்தாண்டையொட்டி, புதுச்சேரி சுற்றுலாத் துறை சாா்பில், முதல்முறையாக கடற்கரைத் திருவிழா கடந்த 13-ஆம் தேதி தொடங்கப்பட்டு 4 நாள்கள் நடத்தப்படுகிறது. 4 இடங்களில் நடைபெறும் இந்தத் திருவிழாவில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், கலை நிகழ்ச்சிகள், கடல்சாா் விளையாட்டுகள், கடல் உணவு விற்பனை, மேலை நாட்டு இசை நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், கட்டுமரப் படகுப் போட்டி, மிதிவண்டி மாரத்தான் போட்டி, கைப்பந்து போட்டி, பட்டம் விடும் நிகழ்ச்சி, அதிகாலை மீன் உணவு தேடல் நிகழ்ச்சி என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இதன் ஒரு பகுதியாக, பாண்டி மெரினா கலங்கரை விளக்கம் அருகில் உள்ள கடற்கரையில் பீச் வாலிபால் போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது. போட்டியை அமைச்சா் தேனீ ஜெயக்குமாா் தொடக்கிவைத்தாா்.
போட்டியில் தமிழகம், புதுச்சேரியைச் சோ்ந்த 25 ஆண்கள் அணியும், 12 பெண்கள் அணியும் பங்கேற்றன. போட்டியின் நிறைவு விழா சனிக்கிழமை (ஏப்ரல் 16) நடைபெறவுள்ளது. இதில், வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளன.