புதுவை மின்துறை ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்
மின் துறை தனியார்மயமாக்கப்படும் விஷயத்தில் கருத்துகளைக் கேட்ட பிறகே முடிவெடுக்கப்படும் என முதல்வர் உறுதியளித்ததையடுத்து, போராட்டத்தைத் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக மின் துறை ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.
மின் துறை தனியார்மயமாக்கப்படும் விவகாரத்தில் கருத்துகளைக் கேட்ட பிறகே முடிவெடுக்கப்படும் என புதுவை முதல்வர் என். ரங்கசாமி உறுதியளித்ததையடுத்து, தொடர் போராட்டத்தைத் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக மின் துறை ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.
புதுவை அரசின் மின் துறையை தனியார்மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து, மாநில மின் துறை ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் கடந்த இரண்டு நாள்களாக தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க | புதுவை மின்துறை ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்: முதல்வர் தலைமையில் பேச்சுவார்த்தை
இதுகுறித்து, மின்துறை அமைச்சர் ஏ. நமச்சிவாயம் நடத்திய முதல் கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாமல் தோல்வியடைந்தது. இதனையடுத்து புதன்கிழமை இரவு புதுவை சட்டப்பேரவை அலுவலகத்தில், முதல்வர் என். ரங்கசாமி தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பொதுமக்கள், மின் துறை ஊழியர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களின் கருத்துகளைக் கேட்ட பின்னர், மின் துறை தனியார்மயமாக்கல் குறித்து முடிவெடுக்கப்படும் என புதுவை முதல்வர் என். ரங்கசாமி உறுதி அளித்ததைத் தொடர்ந்து, தொடர் வேலை நிறுத்த போராட்டத்தைத் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக, மின்துறை ஊழியர் சங்க பிரதிநிதிகள் அறிவித்தனர்.
மேலும், நாளை (வியாழக்கிழமை) முதல் வழக்கம்போல மின் துறை ஊழியர்கள் பணி செய்வார்கள் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.