பள்ளி, கல்லூரிகளில் சத்தான உணவுகளை வழங்க வேண்டும்: புதுவை ஆளுநர் அறிவுரை
புதுவை மாநிலத்தில் கல்வித்துறை மேம்பாட்டு பணிகள் குறித்து, துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுடன், கல்வி அமைச்சர் ஏ. நமச்சிவாயம் வியாழக்கிழமை காலை ஆளுநர் மாளிகையில் நேரில் சந்தித்து பேசினார்.
புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் கல்வித்துறை மேம்பாட்டு பணிகள் குறித்து, துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுடன், கல்வி அமைச்சர் ஏ. நமச்சிவாயம் வியாழக்கிழமை காலை ஆளுநர் மாளிகையில் நேரில் சந்தித்து பேசினார்.
அப்போது, மாநில கல்வி வளர்ச்சி பணிகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
புதுவையில் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை கணினி மயமாக்கி, டிஜிட்டல் முறையில் கற்பதற்கு உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு செய்வது, பள்ளிகளில் கழிப்பறைகளை மேம்படுத்துவது, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதியை உறுதி செய்ய வேண்டும். மாணவர்களின் மதிய உணவில் நவதானியங்களையும், கருப்பட்டி, வேர்க்கடலை, வாழைப்பழம் போன்ற சத்தான உணவுகளை சேர்ப்பதற்கு வேண்டியவைகளை செய்து கொடுக்க வேண்டும் என்று ஆளுநர் ஆலோசனைகள் வழங்கினார்.
மேலும், புதிய கல்விக் கொள்கையின் படி, மாணவர்களுக்கு பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் அவர்களின் ஆரோக்கியத்துக்கு உரிய சத்துணவுகளை வழங்கி அதனை கண்காணிக்க வேண்டும். வரும் 2023ஆம் ஆண்டு உலக நவதானிய ஆண்டாக கொண்டாட உள்ளதையும் நாம் பெருமையோடு நினைவு கொள்ள வேண்டும் என ஆளுநர் அறிவுரை வழங்கினார்.