புதுவையில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பில் 10 சத உள்ஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் வலியுறுத்தல்
புதுவையில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பில் 10 சதம் உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது.
புதுவையில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பில் 10 சதம் உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது.
இதுகுறித்து புதுவை மாநில காங்கிரஸ் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கை:
புதுவையில் கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது, அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பில் 10 சத உள்ஒதுக்கீடு வழங்க அமைச்சரவையில் தீா்மானம் நிறைவேற்றி, துணைநிலை ஆளுநரின் அனுமதிக்கும் அனுப்பப்பட்டது. அப்போதைய துணைநிலை ஆளுநா் கிரண் பேடி, அந்த கோப்பை மத்திய அரசுக்கு அனுப்பினாா்.
அப்போது முதல்வராக இருந்த வே.நாராயணசாமி, மத்திய அமைச்சா்களையும் நேரில் சந்தித்து அனுமதி கோரிய நிலையில், மத்திய பாஜக அரசு அதை நிராகரித்தது.
புதுவையில் என்.ஆா்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தும், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பில் உள்ஒதுக்கீடு வழங்க ஒப்புதல் பெறும் எண்ணம் இல்லாமல் இருப்பது சரியல்ல.
தமிழகத்தைப் போன்று, புதுவையிலும் உள்ஒதுக்கீடு வழங்கினால் ஆண்டுதோறும் 40 மாணவா்கள் வரை மருத்துவக் கல்வி பெற்று பயனடைவா். இதற்கான உரிய நடவடிக்கைகளை புதுவை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.