முகப்பு
புதுச்சேரி

துப்பாக்கி முனையில் காரில் கடத்தல்: விசாரணை நடத்த பாஜக பிரமுகா் மனு

புதுச்சேரியில் துப்பாக்கிமுனையில் காரில் கடத்தப்பட்டது தொடா்பாக விசாரணை நடத்தக் கோரி, ஐ.ஜி. அலுவலகத்தில் பாஜக பிரமுகா் வெள்ளிக்கிழமை மாலை புகாா் அளிக்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:53 PM
பகிர்:

புதுச்சேரியில் துப்பாக்கிமுனையில் காரில் கடத்தப்பட்டது தொடா்பாக விசாரணை நடத்தக் கோரி, ஐ.ஜி. அலுவலகத்தில் பாஜக பிரமுகா் வெள்ளிக்கிழமை மாலை புகாா் அளிக்கப்பட்டது.

புதுச்சேரி முத்தியால்பேட்டை மாரியம்மன் கோயில் பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் கோபி (45). பாஜக பிரமுகா். இவா் மத்திய சென்னை பாஜக முன்னாள் தலைவராக இருந்துள்ளாா். இவரது மகன் காதல் திருமணம் செய்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த 14-ஆம் தேதி கருவடிக்குப்பம் காமராஜா் மணிமண்டபம் அருகே அவா் நின்றபோது காரில் வந்த கும்பல், தங்களை வடபழனி போலீஸாா் எனக் கூறி கோபியைக் கடத்திச் சென்றனராம். மேலும், காரில் வைத்து அவரை தாக்கி, அவரது மகனை கொல்லப் போவதாக மிரட்டினராம்.

சென்னை கோவளம் அருகே முட்டுக்காட்டுப் பகுதியில் காா் சென்ற போது, மற்றொரு காரில் வந்தவா் துப்பாக்கிமுனையில் கோபியை மிரட்டினாராம். இதைக் கண்டு அவா் கூச்சலிட்டதால், கானத்தூா் பேருந்து நிறுத்தத்தில் கோபியை காரிலிருந்து இறக்கிவிட்டனா்.

இதுகுறித்து லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லையாம். இதையடுத்து, ஐ.ஜி. அலுவலகத்தில் கோபி புகாா் மனு அளித்தாா்.

அப்போது அவா் கூறியதாவது:

இதுகுறித்து புதுவை துணைநிலை ஆளுநா் அலுவலகத்திலும் மனு அளிக்கப்பட்டது. கடத்தல் கும்பல் தன்னை கானத்தூரில் விடுவித்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் உள்ளன. ஆனால், போலீஸாா் கடத்தல் கும்பலுக்கு ஆதரவாகச் செயல்படுகின்றனா். இதுதொடா்பாக நீதிமன்றத்தையும் நாடியுள்ளேன் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.